கேம்பிரிட்ஜ் அனாலிடிகா முறைகேடு - மாறி மாறி அடித்துக்கொள்ளும் பாஜக- காங்கிரஸ்
சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ எனப்படும் முகநூலை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே, முகநூல் தொடர்பாக இங்கிலாந்தில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
Recommended Video
2016 அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து பெரும் சர்ச்சை வெடித்தது. அமெரிக்க தேர்தலில் டொனால்டு ட்ரம்பிற்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பிரசாரத்தை மேற்கொள்ள பெருந்தொகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பிரிட்டனை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம் பணியமர்த்தப்பட்டது.
ஃபேஸ்புக், ட்வீட்டர் போன்ற சமூகவலைதளங்களில், ட்ரம்ப் குறித்த தகவல்களை பரப்புவதற்காகவும், அவருக்கு ஆதரவான கருத்துக்களை கொண்டு சேர்க்கவும் பணிகளை இந்நிறுவனம் மேற்கொண்டது.
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டொனால்ட் ட்ரம்புக்காக பணியாற்றிய கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற இணைய நிறுவனம், சுமார் 5 கோடி அமெரிக்கர்களின் பேஸ்புக் விவரங்களை திருடியதாக செய்தி வெளியாகியது. சேனல் 4 செய்தி நிறுவனம் நடத்திய கள ஆய்வில் இந்த அதிர்ச்சி சம்பவம் தெரியவந்துள்ளது.
இந்நிறுவனம் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக நடத்தப்பட்ட தேர்தலிலும் தன்னுடைய கைவரிசையை காட்டியதாக தெரிகிறது. விதிமுறைகளை மீறி தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக கூறி கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடனான வர்த்தக உறவை பேஸ்புக் நிறுவனம் துண்டித்துள்ளது.
இந்நிலையில், ஃபேஸ்புக்கை டெலிட் செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டதாக வாட்ஸ் ஆப் செயலியின் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன் தெரிவித்திருந்தார்.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் நைஜீரியா, கென்யா, செக் குடியரசு மற்றும் அர்ஜெண்டினா, இந்தியா என உலக முழுவதும் நடைபெற்ற 200க்கும் அதிகமான தேர்தல்களில் இந்நிறுவனம் பணியாற்றி உள்ளதாக தெரிவித்து உள்ளது.
கடந்த 2010 ஆண்டு பீகார் மாநில சட்டசபைத் தேர்தலில் இந்திய அரசியல் கட்சி அல்லது கட்சிகளுக்காக பணியாற்றியதாக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா அதனுடைய இணையதளத்தில் தெரிவித்து உள்ளது. தேர்தலில் பாஜக கூட்டணியுடன் இணைந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி வெற்றிப்பெற்றது.
இவ்விவகாரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியது இந்திய தேர்தல்களிலும் தன்னுடைய உத்திகளை கேக்பிரிட்ஜ் அனாலிட்டிகா பயன்பத்தியதா என்ற மில்லியன் டாலர் கேள்வியை அனைவரது மத்தியிலும் எழ செய்து உள்ளது. இந்திய அரசியல் கட்சிகளுக்கு சார்பாக அந்நிறுவனம் பயன்படுத்தியதா என்பது உறுதிசெய்யப்படாத நிலையில் உள்ளது.
அந்நிறுவனம் லண்டனில் உள்ள எஸ்சிஎல் குரூப்புடன் தொடர்பில் உள்ளதாக தெரிவித்து உள்ளது. ஓபிஐ நிறுவனத்தின் இணையதளத்தில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தங்களுடைய வாடிக்கையாளர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டினார். அனைவரின் கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம், தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்வதையும் இந்திய அரசு மதிக்கிறது. ஆனால், தேர்தல்களில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூக்கை நுழைக்க நினைத்தால் அதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் ஐடி அணியின் தலைவர் திவ்யா, இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவின் சேவையை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை என்றும், பாஜகவிற்கு சேவை செய்ததாகத்தான் கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவின் இணைய தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் திவ்யா.
இதேபோல காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலாவும் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்துக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். பாஜக போலியான செய்திகள் மற்றும் போலியான அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். இதுவும் அதுபோல தான் தோன்றுகின்றது.
போலியான செய்தியாளர்கள் சந்திப்பு, போலியான அறிக்கைகள் போலியான நிகழ்ச்சி நிரல் ஆகியவற்றை பாஜக தினந்தோறும் நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியோ காங்கிரஸ் தலைவரோ கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் சேவைகளை ஒரு போதும் பயன்படுத்தியதில்லை. பயன்படுத்தபோவதும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.