யாரைத்தான் நம்புவதோ?: பாஜக எதிர்ப்பு வாக்குகளை பிரித்ததா 2 அஸ்ஸாம் மாநில கட்சிகள்? பரபர சர்ச்சை!
குவஹாத்தி: அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் பாஜக எதிர்ப்பு வாக்குகளை 2 மாநில கட்சிகள் பிரித்துவிட்டன; அதனால்தான் அஸ்ஸாமில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்காமல் போய்விட்டது என்கிற விவகாரம்தான் அம்மாநிலத்தில் மிகப் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்கு மெகா கூட்டணியை உருவாக்கியது காங்கிரஸ். பாஜகவுடன் அஸ்ஸாம் கன பரிஷத் மற்றும் ஐக்கிய மக்கள் விடுதலை கட்சி ஆகியவை மட்டும்தான் கூட்டணி வைத்தன.
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியானது இருக்கிறது அத்தனை எதிர்க்கட்சிகளையும் வளைத்துப் போட்டு மெகா கூட்டணியை கட்டமைத்தது. இடதுசாரிகள், இஸ்லாமியர் கட்சியான ஏஐயூடிஎப், போடோலாந்து மக்கள் முன்னணி என அத்தனை எதிர்க்கட்சிகளையும் அள்ளி அரவணைத்தது காங்கிரஸ். இதனால்தான் பாஜகவுக்கு கடும் போட்டியை காங். கூட்டணி உருவாக்கும் என்றே கருத்து கணிப்புகள் தெரிவித்தன.
அஸ்ஸாம் முதல்வர் யார்? இன்னமும் முடிவுக்கு வராத பாஜகவின் டெல்லி பஞ்சாயத்து!
பாஜகவுக்கு அடி
ஆனால் சட்டசபை தேர்தலில் பாஜக அணி 75 இடங்களிலும் காங்கிரஸ் அணி 50 இடங்களிலும்தான் வென்றன. கடந்த தேர்தலில் 86 இடங்களை வென்றிருந்த பாஜகவுக்கு இம்முறை அடிவிழுந்திருக்கிறது என்பது உண்மை. அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி இன்னொரு குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. அதுதான் இப்போது சர்ச்சையாகி உள்ளது.
பாஜக பி டீ
அதாவது சி.ஏ.ஏ.வுக்கு எதிராக அஸ்ஸாமில் மிக தீவிரமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த சி.ஏ.ஏ. போராட்ட களத்தில் உதயமானவை அஸ்ஸாம் ஜதிய பரிஷத் (ஏஜ்பி), ரைஜோர் தள் (ஆர்டி). ஏஜிபி தலைவர் லுரிஞ்ஜோதி கோகாய், அப்பர் அஸ்ஸாமில் 80 தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தினார். ஆர்டி தலைவரான சிறையில் இருக்கும் அகில் கோகாய், 19 வேட்பாளர்களை களமிறக்கினார். தேர்தல் பிரசார களத்திலேயே இருவரையும் பாஜகவின் பி டீம் என்றே காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் விமர்சித்தனர்.
காங். பின்னடைவுக்கு காரணம்
ஏஜிபி, ஆர்டி கட்சிகள் உருவான நாள் முதலே அவற்றை கூட்டணிக்குள் கொண்டுவர காங்கிரஸ் படாதபாடுபட்டது. காங்கிரஸைப் பொறுத்தவரை சி.ஏ.ஏ. எதிர்ப்பு வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்பது நோக்கமாக இருந்தது. ஆனாலும் மத்திய பாஜக அரசை எதிர்ப்பதாக சொல்லும் ஏஜிபியும் ஆர்டியும் காங்கிரஸ் கூட்டணிக்குப் போகாமல் தனித்தே களம் கண்டன. இதனாலேயே காங். அணிக்கு பெரும் பின்னடைவும் ஏற்பட்டது.
14 தொகுதிகள் நிலவரம்
இதனைத்தான் இப்போது காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருகின்றன. குறிப்பாக 14 தொகுதிகளின் வாக்குகளை முன்வைத்து காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்த 14 தொகுதிகளில் ஏஜிபியும் போட்டியிட்டது ஆர்டி கட்சியும் போட்டியிட்டது. ஏஜிபி 14 தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆர்டி கட்சியும் 4 தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்த இரு கட்சிகளின் வாக்குகள் பிளஸ் காங்கிரஸ் அணி வேட்பாளர்களின் வாக்குகளை கூட்டினால் பாஜக இந்த 14 தொகுதிகளையும் இழந்து ஆட்சி அமைக்கவே முடியாமல் போயிருக்கும். அதாவது காங்கிரஸ் அணி இப்போது 50 இடங்களில் வென்றுள்ளது; இந்த இரு கட்சிகளும் கூட்டணியில் இணைந்திருந்தால் களநிலவரமே தலைகீழாய் போயிருக்கும். இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரிதுபர்னா கொன்வார், காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு ஏஜிபி- ஆர்டி கட்சிகள் மட்டுமே காரணம் அல்ல. பல காரணங்களுள் இந்த இரு கட்சிகளும் ஒன்று என்றார்.
2 மாநில கட்சிகளை உருவாக்கியதே பாஜக?
அஸ்ஸாமில் 2-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று கொண்டிருந்த போது பாஜகவின் மூத்த தலைவர் ஹேமந்த பிஸ்வாஸ் ஷர்மா கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. அதாவது சி.ஏ.ஏ. எதிர்ப்பு வாக்குகளை சிதறவைக்க எங்கள் திட்டப்படியே புதிய கட்சிகள் உருவாக்கப்பட்டன என்பதுதான் அந்த செய்தி. இதை தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது அஸ்ஸாம் மூத்த பத்திரிகையாளர் அடனு பூயான். இதனையும் இப்போது காங்கிரஸ் தலைவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர். ஆனாலும் ஏஜிபியும், ஆர்டி கட்சியும் இடைவிடாமல் பாஜகவின் பி டீம் என்பதை நிராகரித்து வருகின்றனர். காங் அணியின் வெற்றியை தட்டி பறித்தது தாங்கள் அல்ல என்றும் திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.