தெலுங்கானாவில் காங்கிரஸ் வேட்பாளர் தற்கொலை முயற்சி
வாராங்கல்: தெலுங்கானாவில் கங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா, வராங்கல் மாவட்டம் வரதன்பேட்டை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஸ்ரீதர் எம்.எல்.ஏ. போட்டியிடுகிறார். நேற்று மாலை அவர் மாநில காங்கிரஸ் தலைவர் பென்னாலி லட்சுமியையாவை சந்தித்து விட்டு பாதுகாவலர்களுடன் காரில் வந்தார்.
அப்போது நண்பர் ஒருவரை போனில் பேசி மோட்டார்சைக்கிளில் வர வழைத்தார். அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிளை வாங்கிய ஸ்ரீதர் எம்.எல்.ஏ. அதனை ஓட்டி சென்றார். பாதுகாவலர் ஒருவர் மட்டும் பின்னால் அமர்ந்து இருந்தார்.
பென்டியாலா அருகே மாந்தோப்புக்குள் மோட்டார்சைக்கிளை நிறுத்தி பாதுகாவலரை அங்கேயே நிற்க சொல்லி விட்டு ஸ்ரீதர் எம்.எல்.ஏ. மட்டும் தோப்புக்குள் சென்றார்.
நீண்ட நேரம் ஆகியும் அவர் வரவில்லை. சந்தேகம் அடைந்த அவரது பாதுகாவலர் அங்கு சென்று பார்த்தபோது மயங்கி நிலையில் ஸ்ரீதர் எம்.எல்.ஏ. கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு வாரங்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஸ்ரீதர் எம்.எல்.ஏ. அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு உள்ளது தெரிய வந்து உள்ளது. அவர் எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என தெரியவில்லை.
தேர்தல் செலவுக்கு தேவையான பணம் கிடைக்காமல் அவர் கஷ்டப்பட்டு வந்ததாக தெரிகிறது. மோட்டார் சைக்கிளை அவரிடம் வந்து கொடுத்தது நண்பர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தெலுங்கானா சட்டசபை தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.