உடன் வந்தவர் மனுவோடு 'தொலைந்தததால்', வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாமல் திரும்பிய நக்மா!
மீரட்: உத்தரப்பிரதேசத்தின் மீரட் தொகுதியில் போலீஸ் கெடுபிடியால் வேட்புமனுத்தாக்கல் செய்ய முடியாமல் காங்கிரஸ் வேட்பாளர் நடிகை நக்மா திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
நடிகை நக்மாவை உத்தரப்பிரதேசத்தின் மீரட் தொகுதியில் வேட்பாளராக களமிறக்கியுள்ளது காங்கிரஸ் கட்சி. அவர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்கு சென்றார்.
ஒரு வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே வேட்புமனுத்தாக்கல் செய்ய செல்ல அனுமதிக்கப்படுவர் என்பது விதி. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் சென்ற நக்மா, வேட்பு மனு பேப்பர்களை கொண்டு வந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர் சலீம் பார்தி கூட இல்லாதது கண்டு திடுக்கிட்டார்.
அவரை போலீசார் ஆட்சியர் வளாக கேட்டிலேயே தடுத்து நிறுத்திவிட்டனர். நக்மாவும் எவ்வளவோ எடுத்து சொல்லிப் பார்த்தும் போலீசார் அவரை உள்ளே விடுவதாக இல்லை. இதனால் வேட்புமனுத்தாக்கல் செய்யாமலேயே நக்மா திரும்ப நேரிட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நக்மா, போலீசாரின் கெடுபிடியால்தான் வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியவில்லை.. சனிக்கிழமையன்று வேட்புமனுத் தாக்கல் செய்வது குறித்து கட்சி தலைவர்களுடன் ஆலோசிக்கிறேன் என்று கூறினார்.