பிரணாப் முகர்ஜியை தொடர்ந்து ராகுல் காந்தி.. ஆர்எஸ்எஸ் விழாவிற்கு விரைவில் அழைக்கப்படுகிறார்!
ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் விழாவில் கலந்து கொள்ள, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைக்கப்பட உள்ளார்.
டெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் விழாவில் கலந்து கொள்ள, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைக்கப்பட உள்ளார்.
இந்த விழா அடுத்த மாதம் நடக்க உள்ளது. இந்தியாவின் எதிர்காலம் என்ற தலைப்பில் இந்த விழா நடக்க உள்ளது. இந்தியாவில் தற்போது நிலவும் அரசியல் குறித்தும் பொருளாதார சூழ்நிலை குறித்தும் இதில் விவாதம் நடத்தப்பட உள்ளது.
இதற்கு பல முக்கிய தலைவர்கள் அழைக்கப்பட இருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த அழைப்பை ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடுமையான தாக்குதல்
சில நாட்களுக்கு முன் ஐரோப்பாவில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ் அமைப்பை எதிர்த்து கடுமையாக பேசி இருந்தார். அதேபோல் எகிப்தில் உள்ள தீவிரவாத அமைப்பு ஒன்றுடன், ஒப்பிட்டு, இரண்டு அமைப்பும் ஒரே வருடத்தில் தொடங்கப்பட்டது , இரண்டும் ஒரே மாதிரியான குறிக்கோள் கொண்டது என்று கடுமையாக கருத்து தெரிவித்து இருந்தார்.
அழைப்பு விடுத்துள்ளது
இந்த கண்டனத்தின் சூடு குறையும் முன் ஆர்எஸ்எஸ் அமைப்பு முக்கியமான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, ''இந்தியாவின் எதிர்காலம்'' என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் அமைப்பு அடுத்த மாதம் நடத்த உள்ள நிகழ்விற்கு ராகுல் காந்தி அழைக்கப்பட உள்ளார். இதற்கான முறையான அழைப்பிதழ் அவருக்கு அளிக்கப்பட உள்ளது.
ஏற்பாரா
இந்த அழைப்பை ராகுல் காந்தி ஏற்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலும் ராகுல் காந்தி இந்த சந்திப்பிற்கு செல்வார் என்று கூறப்படுகிறது. இதில் அரசியல் பாகுபாடு இல்லாத நிகழ்ச்சி என்பதால் ராகுல் காந்தி மரியாதை கருதி செல்ல வாய்ப்புள்ளது. எல்லா முக்கிய தலைவர்களும் கட்சி பாகுபாடு இன்றி இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட உள்ளனர்.
ஏற்கனவே என்ன நடந்தது
ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தற்போது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆண்டு விழா நடந்தது. இதற்கு சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் குடியரசுத்தலைவருமான பிரணாப் முகர்ஜி அழைக்கப்பட்டு இருந்தார். பிரணாப் முகர்ஜி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.