அரசியலமைப்பு சட்டத்தை மீறிவிட்டார் ஆளுநர்.... காங்கிரஸ் குற்றச்சாட்டு!
கர்நாடகாவில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி: கர்நாடகாவில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததன் மூலம், அரசியலமைப்பு சட்டத்தை மாநில ஆளுநர் மீறிவிட்டார் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஆட்சி அமைக்கும்படி பாஜகவுக்கு கர்நாடக ஆளுநர் இன்று அழைப்பு விடுத்தார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ப சிதம்பரம், கபில் சிபில் உள்ளிட்டோர் டெல்லியில் நிருபர்களிடம் பேட்டியளித்தனர். அப்போது சிதம்பரம் கூறியதாவது:
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்து போதிய பெரும்பான்மை பலம் உள்ளதை ஆளுநரிடம் நிரூபித்துள்ளோம். இருப்பினும் பாஜகவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய செயலாகும். பெரும்பான்மை உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், 117 பேரின் ஆதரவு கடிதத்தை குமாரசாமி வழங்கியுள்ளார். ஆனால், அவருக்கு அழைப்பு விடுக்காதது ஏன்?
மாநில ஆளுநர் என்பவர் அரசியலமைப்பு சட்டப் பதவியில் உள்ளவர். அவர் சட்டவிரோதமான பாதையில் செல்லக் கூடாது. உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மதித்து, பெரும்பான்மை உள்ள அணியையே அழைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.