"நானும் ரவுடி"தான் என நிரூபித்த காங்கிரஸ்.. இனியும் இது "மோடியின் குஜராத்" அல்ல!
அகமதாபாத்: 2012 சட்டசபைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் பாஜக 16 தொகுதிகளை இழந்துள்ளது. அதேசமயம், கடந்த தேர்தலை விட 19 தொகுதிகளை கூடுதலாக அள்ளியுள்ளது காங்கிரஸ்.
என்னதான் பாஜக வெற்றி என்றாலும், மோடியின் சொந்த மாநிலத்தில் அது கடந்த தேர்தலில் வாங்கியதைக் கூட இந்த முறை வாங்க முடியாமல் போயிருப்பது நிச்சயம் பாஜகவுக்கு கவலைக்குரியதுதான். அவர்கள் அதை வெளியில் காட்டாவிட்டாலும் கூட மோடியிடம் என்ன விளக்கம் அளிக்கப் போகிறது பாஜக தலைமை என்பது கேள்விக்குரியதாகும்.
அதேசமயம், காங்கிரஸ் தரப்பு தோல்வி அடைந்தாலும் செம உற்சாகமாக உள்ளது. காரணம் இந்தத் தேர்தலில் அக்கட்சிக்கு தோல்வி கிடைத்தாலும் கூட லாபம் பெரிதாகும்.
அதிரடி காட்டிய காங்கிரஸ்
குஜராத் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிரடி பாய்ச்சலைக் காட்டி விட்டது. மோடியின் குஜராத் என்ற பிம்பத்தைத் தகர்த்து நாங்களும் ரவுடிதான் என்று காட்டி விட்டது காங்கிரஸ்.
22 வருட துன்பம் ஓடியது
கடந்த 22 வருடமாக மோடியிடம் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வந்த கட்சி காங்கிரஸ். ஆனால் ரூபானியின் குஜராத்தில் அது சற்று மறுமலர்ச்சியைக் கண்டுள்ளது. இதுவரை பெற்ற அவப் பெயரை இந்தத் தேர்தலில் துடைத்து விட்டது காங்கிரஸ்.,
பாஜகவுக்கு 16 போச்சு
பாஜகவுக்கு இந்தத் தேர்தல் இழப்பைக் கொடுத்துள்ளது. கடந்த தேர்தலை விட வாக்குகளை அதிகம் வாங்கினாலும் கூட அது 16 தொகுதிகளை இழந்துள்ளது. கடந்த தேர்தலில் பாஜக 115 தொகுதிகளில் வென்றது. இம்முறை கிடைத்திருப்பது 99தான்.
100 தாண்ட முடியாமல் போச்சே
100 தொகுதிகளைக் கூட பாஜக தொட முடியாமல் போனது பெருத்த அவமானம்தான். என்னதான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாலும் கூட 100ஐக் கூடத் தொட முடியலையேப்பா என்று காங்கிரஸார் கிண்டலடித்து வருகின்றனர்..
காங்கிரஸுக்கு கூடுதலாக 19
மறுபக்கம் காங்கிரஸ் கட்சிக்கு 19 தொகுதிகள் கூடுதலாக கிடைத்துள்ளன. கடந்த தேர்தலில் 61 தொகுதிகளை காங்கிரஸ் பெற்றிருந்தது. ஆனால் இம்முறை அதற்குக் கிடைத்திருப்பது 80 ஆகும். இது மிகப் பெரிய லாபம்.
மொத்தத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்தது.. மக்கள் மனங்களை காங்கிரஸ் வென்றுள்ளது.