மோடியைப் புகழ்ந்து பேசியதால் சர்ச்சை... சசிதரூருக்கு காங். கண்டனம்
டெல்லி: பிரதமர் மோடியைப் பற்றி புகழ்ந்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூருக்கு காங்கிரசார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரதமர் மோடியை வெகுவாகப் பாராட்டி பேசியிருந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர். அதாவது ‘பிரதமர் மோடி, அனைவரும் வெறுக்கும் தன்மையில் இருந்து தன்னை நவீனத்துவம் மற்றும் வளர்ச்சியின் அவதாரமாக மாற்றிக் கொண்டுள்ளார்' என அவர் கூறியிருந்தார்.
மேலும், 'நான் மோடியின் ரசிகர் இல்லை. பா.ஜ.,வில் சேரப்போவதும் இல்லை. தேர்தலுக்கு பிந்தைய அவரின் அணுகுமுறைகள் எனக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தின,' என அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.
மோடி குறித்த சசிதரூரின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பச்சோந்தி...
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் ஐயர் கூறுகையில், ‘மோடியைப் பாராட்டி பேசிய சசிதரூர் ஒரு பச்சோந்தி' எனக் குறிப்பிட்டுள்ளார்.
புத்திசாலி சசிதரூர்...
மேலும், ‘சசிதரூர் போன்ற புத்திசாலி மனிதர்கள் இவ்வளவு சீக்கிரமாக ஒருவரைப் பற்றி கருத்துக் கூறுவது ஏற்புடையது அல்ல' என அவர் தெரிவித்துள்ளார்.
காங். கருத்தல்ல...
அதேபோல், காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஷோபனா ஓசா கூறுகையில், ‘பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டி முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் கூறிய கருத்துகள் அவருடைய சொந்த கருத்தாகும். அதற்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.
காங். காத்திருக்கும்...
மேலும், புதிய அரசு குறித்தும் பிரதமரின் செயல்பாடுகள் குறித்தும் கட்சியின் சார்பில் கருத்து கூற இன்னும் அவகாசம் உள்ளது. தான் கூறியதை மோடி நிறைவேற்றட்டும். காங்கிரஸ் அதற்காக காத்திருக்கும். நான் கட்சியின் சார்பில்தான் இதை கூறுகிறேன் என்றார் ஓசா.