ஹரியானா தேர்தல்: காங்கிரஸில் நீடிக்கும் உட்கட்சி யுத்தம்.. பாஜகவுக்கு தாரை வார்க்கப்படும் வெற்றி?
சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நெருங்கும் நிலையிலும் உட்கட்சி மோதல் முடிவுக்கு வராததால் பாஜக பெரும் மகிழ்ச்சியில் உள்ளது.
ஹரியானாவின் 90 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் வரும் 21-ந் தேதி நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்வோம் என்கிற நம்பிக்கையில் இருக்கிறது.
அதற்கேற்ப பிரதான எதிர்க்கட்சியும் கூட்டணி தொடங்கி உட்கட்சி விவகாரம் வரை கோட்டை விட்டுக் கொண்டே இருக்கிறது. ஹரியானா காங்கிரஸ் தலைவராக இருந்த அசோக் தன்வார் கடந்த மாதம் திடீரென தூக்கி அடிக்கப்பட்டார்.
அவருக்குப் பதில் குமாரி செல்ஜா, புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். அதேநேரத்தில் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவே முதல்வர் வேட்பாளர் எனவும் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தாமும் தமது ஆதரவாளர்களும் புறக்கணிக்கப்படுவதாக அசோத் தன்வார் போர்க்கொடி தூக்கினார்.
வேலையின்மை.. ஊழல்.. ஈராக்கில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்: 34 பேர் பலி, 1500 பேர் காயம்
காங்கிரஸின் வேட்பாளர் பட்டியல்கள் வெளியாகும் போது அசோக் தன்வார் ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தினர். இத்தனைக்கும் ராகுல் காந்தியின் ஆதரவாளர்தான் அசோக் தன்வார். ஆனால் லோக்சபா தேர்தலில் அசோக் தன்வார் ஈடுபாட்டுடன் செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது,
இதனாலேயே அவர் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இப்படி காங்கிரஸ் தலைவர்கள் அடித்துக் கொண்டிருப்பதை புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது பாஜக. இவர்களது மோதல் வெற்றியை தங்களுக்கு அவர்களாகவே தாரை வ்வார்த்து தருவதாக இருக்கிறது என்கின்றனர் பாஜக தலைவர்கள்.