நாடு முழுக்க காங்கிரசுக்கு தோல்வி முகம்.. புதுச்சேரி மட்டும் தப்பியது
டெல்லி: நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் அதிகமாக பாதிக்கப்பட்ட கட்சி காங்கிரசாகத்தான் இருக்க முடியும். புதுச்சேரி தவிர எல்லா இடங்களிலும் அக்கட்சிக்கு படுதோல்விகளை பரிசாக அளித்துள்ளனர் மக்கள்.
இதில் கேரளா மற்றும், அசாம் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வந்த மாநிலங்கள். கேரளாவில் இடதுசாரிகளிடமும், அசாமில், பாஜகவிடமும், ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ். ஆரம்பத்தில் இருந்தே வாக்கு எண்ணிக்கை டிரெண்ட் அப்படித்தான் இருந்தது.
அதேபோல தமிழகத்திலும், காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க முடியவில்லை. 2வது இடத்தில் இருப்பதாகவே தொடக்கம் முதல் டிரெண்ட் காட்டியது.
புதுச்சேரியில் மட்டும், என்.ஆர்.காங்கிரசை வீழ்த்தி, ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு காங்கிரஸ்-திமுக கூட்டணி வலிமையான டிரெண்டிங்கில் இருந்தது.
காங்கிரஸை பொறுத்தளவில், அசாம் மற்றும் தமிழகத்தில் பெற்ற தோல்வியை அக்கட்சியால் ஜீரணித்திருக்க முடியாது. கேரளாவில் காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பாலானோருக்கு தோல்வி நிச்சயம் என்று முன்பே தெரிந்திருக்கும்.
அதேநேரம், டெல்லி, பீகார் சட்டசபை தோல்விகளால் பின்னடைவை சந்தித்த பாஜக, வடகிழக்கு மாநிலமான அசாமில் முதல் முறையாக வெற்றிக்கொடியை நாட்டி, தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியை பாய்ச்சியுள்ளது.