போட்டியிட மறுத்த அமரீந்தர்சிங்கை அருண்ஜேட்லிக்கு எதிராக களத்தில் தள்ளிவிட்டது காங்கிரஸ்!
அமிர்தசரஸ்: பாரதிய ஜனதா மூத்த தலைவர் அருண் ஜேட்லியை எதிர்த்து போட்டியிடவே முடியாது என்று அடம்பிடித்த பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங்கை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளது.
ராஜ்யசபாவில் பாரதிய ஜனதா கட்சி தலைவராக இருக்கும் அருண்ஜேட்லி முதல் முறையாக லோக்சபா தேர்தலில் களம் இறங்குகிறார். பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் தொகுதியில் அருண் ஜேட்லி போட்டியிடுகிறார்.
அந்த தொகுதியில் அருண் ஜேட்லி தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அருண் ஜேட்லியை எதிர்த்து போட்டியிட 'வெயிட்டான' வேட்பாளராக காங்கிரஸ் கட்சி, முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங்கை கேட்டுக் கொண்டது.
ஆனால் அமரீந்தர்சிங்கோ ஒருபோதும் தம்மால் தேர்தலில் போட்டியிடவே முடியாது.. பிரசாரம் மட்டும் செய்கிறேன் என்று டெல்லி மேலிடத்திடம் மன்றாடிப் பார்த்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி தலைமை இதை கண்டுகொள்ளாமல் அமரீந்தர்சிங்கையே அருண் ஜேட்லிக்கு எதிரான வேட்பாளராக அறிவித்திருக்கிறார்.
இதனால் அமரீந்தர்சிங் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். தோற்றுவிடுவோம் என்று தெரிந்தும் தேர்தல் களத்துக்குப் போகவில்லை என்று சொன்னேன்.. அதையும் கேட்காமல் களத்தில் தள்ளிவிட்டார்களே என்று புலம்புகிறாராம் அமரீந்தர்சிங்.