திட்டமிட்ட செயல்பாடுகள்... சிறப்பான வியூகங்கள்... 2019க்கு தயாராகிறது காங்கிரஸ்!
கர்நாடகா சட்டசபை தேர்தலில் மிகச் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், 2019 தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகி விட்டதாகவே தெரிகிறது.
டெல்லி: கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து நாளை நடக்க உள்ள பெரும்பான்மை நிரூபிக்கும் வாக்கெடுப்பு என, ஒவ்வொரு கட்டத்திலும் திட்டமிட்ட செயல்பாடுகள், சிறப்பான வியூகங்கள் என அதிரடி அரசியலில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.
கர்நாடகாவில் இந்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடந்தது. 15ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. துவக்கத்திலேயே பாஜக அதிக தொகுதிகளில் வெற்றிபெறும் என்ற நிலை இருந்தது. வழக்கம்போல் தோல்வி அடைந்ததற்காக காரணத்தை தேடாமல், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று காங்கிரஸ்
தலைமை யோசிக்கத் துவங்கியது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்ற நிலையில், கிடைத்த வாய்ப்பை மிகவும் கெட்டியாக பிடித்துக் கொண்டது காங்கிரஸ்.
பாஜகவுக்கு அடுத்ததாக அதிக தொகுதிகளில் வென்ற கட்சி என்ற நிலையில் இருந்தாலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவை கேட்காமல், அந்தக் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக முதல் பாலிலேயே சிக்சர் அடித்தது காங்கிரஸ்.
பாஜகவை முந்திக் கொண்டு, மஜதவுடன் பேச்சு வார்த்தை நடத்தியதுடன், முதல் ஆளாக ஆளுநரை சந்தித்து ஆதரவு கேட்டது காங்கிரஸ். கட்சி எம்எல்ஏக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் நடவடிக்கை மஜதவுடன் இணைந்து காங்கிரஸ் எடுத்தது. குலாம் நபி ஆசாத் போன்ற சீனியர்கள உடனடியாக பெங்களூர் விரைந்தனர்.
சோனியா வியூகம்
சோனியா காந்தி மற்றும் அவருடைய மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் டெல்லியில் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, உடனடி நடவடிக்கைக்கான வியூகங்களை வகுத்து கொடுத்தனர்.
கூட்டணியை வலுப்படுத்தியது
மம்தா பானர்ஜி, மயாவதி, அகிலேஷ் யாதவ் என, முக்கிய கட்சியின் தலைவர்களுக்கு கர்நாடகா நிலைமை குறித்து தகவல் தெரிவித்தனர். பாஜகவுக்கு அழைப்பு விடுத்தபோது, திர்த்து அவர்கள் குரல் கொடுக்க இது உதவியது. அதைவிட, அடுத்த லோக்சபா தேர்தலில் இந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பையும் காங்கிரஸ் வலுப்படுத்திக் கொண்டது.
நள்ளிரவிலும் அதிரடி
நள்ளிரவில் உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டியது என, ஒவ்வொரு நடவடிக்கைக்கும் மாற்று திட்டங்களை வைத்துக் கொண்டு கட்சியின் மூத்த தலைவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதற்கேற்றார் போல், ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா ஆகியோரும் முழு அளவில் தங்களை இதில் ஈடுபடுத்திக் கொண்டனர்.
2019க்கு தயார்
காங்கிரஸ் கட்சியின் இந்த சிறப்பான செயல்பாடுகள், அதன் அதிரடி வியூகங்கள் ஆகியவை, 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு கட்சி தயாராகி விட்டதையே காட்டுகிறது.