சகிப்புத்தன்மை பற்றி பேச காங்கிரசுக்கு தகுதியில்லை: பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி ஆவேசம்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலின் இறுதி கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திரமோடி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். புர்னியா மாவட்டத்தில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில், அறிவுஜீவிகள் விருதுகளை திருப்பிக்கொடுப்பது, அவர்களுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட பல நடப்பு விவகாரங்களுக்கு மோடி கடுமையாக பதிலடி கொடுத்தார்.
மோடியின் பேச்சிலிருந்து முக்கிய பகுதிகள்: பீகாரில் லாலு பிரசாத் 15 வருடமும் அவரது சின்னத்தம்பி (நிதீஷ்) 10 வருடமும் ஆட்சி செய்தனர். அந்த காலகட்டங்களில் நடந்த வளர்ச்சி பணிகள் என்ன?
பீகாரில் மீண்டும் காட்டுராஜ்ஜியம் வந்துவிட கூடாது என்ற அச்சத்தால், பாஜக பக்கம் பெண்கள் திரளாக வந்துகொண்டுள்ளனற்.
உங்களுக்கு நினைவுள்ளதா, 1984ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி டெல்லியில் என்ன நடந்தது என்பது? சீக்கிய மக்கள் சரமாரியாக படுகொலை செய்யப்பட்டனர். அந்த படுகொலை சம்பவம் குறித்து காங்கிரஸ் மீது கடுமையான குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அந்த காங்கிரஸ் தற்போது சகிப்புத்தன்மை குறித்து பேசுகிறது.
காங்கிரசுக்கு அந்த தகுதி கிடையாது. இந்தியா இன்னும் அந்த படுகொலையை மறக்கவில்லை. சகிப்புத்தன்மை பற்றி காங்கிரஸ் கட்சி பாடம் எடுப்பதை மக்கள் விரும்பவில்லை. காங்கிரஸ் தனது நாடகங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
லாலுவும், நிதீஷும் காங்கிரசுக்கு எதிராக போராடி வந்தவர்கள். ஆனால் இப்போது எந்த நிர்பந்தத்தால் பீகாரில் காங்கிரசுக்கு தங்கள் கூட்டணியில் 40 தொகுதிகளை ஒதுக்கியுள்ளார்கள்?
நிதீஷும், லாலுவும் என்ன ஆட்டம் வேண்டுமானாலும் ஆடட்டும். பீகார் தேர்தல் முடிவு நவம்பர் 8ம் தேதி வெளியாக உள்ளது. எனவே, இந்த ஆண்டு பீகார் மக்கள் இரு தீபாவளிகளை கொண்டாடப்போகிறார்கள். இவ்வாறு மோடி பேசினார்.