வருமான வரி சோதனை நடந்தது ஏன்?... எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பிரதமர் மோடி பதில்
பாட்னா: வருமான சோதனைகள் சட்டப்படி நடைபெற்றன என்றும், அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் நடக்கவில்லை என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
பீகார் மாநிலத்தின் அராரியா பகுதியில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டு நலனுக்கான பார்வை, காங்கிரசிடம் இல்லை என்று கூறினார்.
மேலும், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த வருமான வரி சோதனையை சிலர் விமர்சிக்கிறார்கள் என்றார். எங்களிடம் தேசபக்தி உண்டு என்று கூறிய மோடி, காங்கிரசிடம் ஓட்டு பக்தியே காணப்படுகிறது என விமர்சனம் செய்தார்.
மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும்போது தேசநலனையும், காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியலையும் பின்பற்றுகின்றன. பல தீவிரவாத தாக்குதல்களில் ஓட்டு வங்கிக்காக இந்து பயங்கரவாதம் என்ற பெயரில் விசாரணையை காங்கிரஸ் அரசு திசை திருப்பியது என்று குற்றம்சாட்டினார்.
ஆனால், பாஜக அரசு உரி தாக்குதலுக்காக சர்ஜிக்கல் ஸ்டிரைக்கையும், புல்வாமா தாக்குதலுக்காக பாலகோட் வான்வெளி தாக்குதலையும் நடத்தியது. இந்த நாடு தேச பக்தி, ஓட்டு பக்தி ஆகிய இரண்டு விதமான அரசியலையும் பார்த்து வருகிறது என்றும் தெரிவித்தார்.