கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவிக்கு ஆபத்து.. புதிய முதல்வராக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாய்ப்பு!
பெங்களூர்: கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவியை பறிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திறமையான நிர்வாகமின்மை, பொதுமக்களிடம் காங்கிரசின் செல்வாக்கை உயர்த்தி போதிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
சித்துவிற்கு பதிலாக, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே முதல்வராகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
சமீபத்தில் சேர்ந்தவர்
தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளத்தில், அவரது மகன் குமாரசாமிக்கு முக்கியத்துவம் தரப்பட்டால், அங்கு மூத்த தலைவராக இருந்த சித்தராமையா, சுமார் 10 வருடங்கள் முன்பு காங்கிரசில் இணைந்தார். அவரின் மக்கள் செல்வாக்கை மதித்து, பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை கொடுத்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
சித்து சிஎம்
கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வென்றது. இதன்பிறகு, முதல்வர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்ற ஆலோசனைகள் நடந்தன. அப்போது மத்திய அமைச்சராக இருந்த மல்லிகார்ஜுன கார்கே இப்போட்டியில் முதலிடத்தில் இருந்தார். ஆனால், சித்தராமையா தனது ஆதரவாளர்களுடன் கட்சியை உடைக்க திட்டமிட்டதாக தகவல் வெளியானது. எனவே கார்கேவை அமைதிகாக்க சொல்லிவிட்டு சித்துவிற்கு பட்டம் கட்டப்பட்டது.
காங்கிரசாருக்கு கல்தா
சித்தராமையா அமைச்சரவையில், அவரிடம் நெருக்கமாக இருந்தவர்களுக்கும், மதசார்பற்ற ஜனதாதளத்தில் இருந்து வந்தவர்களுக்கும் முக்கிய அமைச்சர் இலாக்காக்கள் தரப்பட்டன. தொடக்கம் முதல் காங்கிரசில் இருந்தவர்களில் சில மூத்த தலைவர்களுக்கு அமைச்சரவையில் கல்தா தரப்பட்டது. அவர்கள் மேலிடத்தில் லாபி செய்து பல மாதங்களுக்கு பிறகே அமைச்சரவையில் சேர முடிந்தது. அப்போது அவர்களுக்கு அதிகாரம் குறைந்த துறைகளை வழங்கப்பட்டன.
மூத்த தலைவர்கள் கோபம்
இதனால் காங்கிரசின் மூத்த தலைவர்களான முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, மல்லிகார்ஜுனகார்கே, டி.கே.சிவகுமார், மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் போன்றோரின் அதிருப்தியை சம்பாதித்தார் சித்தராமையா. 2013ல் முதல்வராக பதவியேற்ற சித்தராமையா, சொல்லிக்கொள்ளும்படி எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை.
செல்வாக்கு சரிகிறது
ஆட்சி ஒன்று ஊழல் இன்றி நடப்பதை போல ஒரு தோற்றம் உள்ளதே தவிர, பணிகள் ஏதும் நடக்கவில்லை. கிணற்றில் போட்ட கல்போல நிர்சலனமாக ஆட்சி சென்றுகொண்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் இருந்த செல்வாக்கு தேய்ந்து, பதிலாக பாஜக பக்கம் விசுவாசம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து ஏற்கனவே கோபத்தில் இருந்த காங். முக்கிய புள்ளிகள் சோனியா கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
தொடர் தோல்வி
கர்நாடகாவில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது, பெங்களூர் மாநகராட்சியில் பாஜகவைவிட பின்தங்கி 2வது இடத்தையே பிடிக்க முடிந்தது, மூத்த காங்கிரஸ் தலைவர்களை புறக்கணித்து தன் இஷ்டப்படி நடப்பது போன்ற குற்றச்சாட்டுகள் சித்து தலை மீது தூக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே கர்நாடக காங்கிரஸ் விவகாரங்களை மேற்பார்வையிடுமாறு எஸ்.எம்.கிருஷ்ணாவை சோனியா கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.
டெல்லியில் கிருஷ்ணா முகாம்
கிருஷ்ணா டெல்லியில் முகாமிட்டு, சித்துவிற்கு எதிராக புகார் பட்டியல்களை அடுக்கிவருகிறார். எனவே வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில், சித்தராமையாவை பதவியில் இருந்து விலக உத்தரவிட்டுவிட்டு பதிலாக கார்கேவை முதல்வராக்க சோனியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலித் கார்டு
கார்கே, தலித் சமூகத்தை சேர்ந்தவர். கர்நாடக உள்துறை அமைச்சராக பதவி வகித்து நற்பெயர் வாங்கியவர். எனவே அவரை அடுத்த முதல்வராக்கி ஜாதி ரீதியான வாக்குகளை அறுவடை செய்வதோடு, செல்வாக்கை கூட்டவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. மேலிடத்தின் கட்டளைக்கு சித்தராமையா பணிவாரா, அல்லது தனது ஆதரவாளர்களோடு ரிசார்ட்டில் தஞ்சம்புகுந்து ஆட்சியை கவிழ்ப்பாரா என்பது போன்ற கேள்விகளுக்கு வரும் மாதங்களில் விடை கிடைக்கும்.