அரசியலில் நீடிப்பதே பெரிய சவாலா இருக்கு.. காங். குறித்து ஜெய்ராம் ரமேஷ் ஷாக் பேச்சு!
காங்கிரஸ் கட்சியின் இருப்புக்கே நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொச்சி: காங்கிரஸ் கட்சி அரசியலில் நீடிப்பது என்பதே சவாலானதாக மாறிவிட்டது... மூத்த தலைவர்கள் பலரும் ஆட்சியில் இருப்பதாக கெத்து காட்டும் போக்கையும் கைவிட வேண்டும் என பொளந்து கட்டியுள்ளார் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்
நாடு முழுவதும் பாஜகவின் ஆள்பிடி வலையில் சிக்கி காங்கிரஸ் சிதறிப் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் காங்கிரஸின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகி வருகிறது.
இது தொடர்பாக கொச்சியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டி:
மிதப்பில் தலைவர்கள்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இன்னமும் ஆட்சியில் இருப்பதாக மிதப்பில் இருக்கின்றனர். இந்த அணுகுமுறையை முதலில் இவர்கள் கைவிட வேண்டும்.
தேவையற்றவை
காங்கிரஸ் கட்சியின் எண்ணங்கள், செயல்பாடுகள், எதை முன்னிறுத்துவது, எப்படி பேசுவது என அனைத்திலுமே மாற்றம் தேவை. மக்கள் இப்போது விரும்புவது புதிய ஒரு காங்கிரஸைத்தான். மக்களுக்கு பழைய கோஷங்கள், வியூகங்கள் என்பது தேவையில்லாத ஒன்றகிவிட்டது.
தேர்தல் தோல்விகள்
காங்கிரஸ் கட்சியின் முன்பு மிகப் பெரும் சவால் இருக்கிறது. 1996 முதல் 2004-ம் ஆண்டு வரை காங்கிரஸ் நெருக்கடியை எதிர்கொண்டது. 1977 தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் நெருக்கடி ஏற்பட்டது. அது வேறான நிலைமை.
இருப்புக்கே சவால்
இப்போது காங்கிரஸ் கட்சியின் இருப்புக்கே நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர வேண்டும். இது தேர்தல் தோல்வியின் மூலம் வரக்கூடிய ஒரு நெருக்கடியே அல்ல. உண்மையில் காங்கிரஸ் கட்சி கடும் சவாலையும் நெருக்கடியையும் எதிர் கொண்டிருக்கிறது.
அதிருப்தி அலை கனவு
எம்.எல்.ஏக்களை வலைவீசி பிடிக்கும் பாஜக வேட்டையில் இருந்து தப்பிக்க குஜராத் எம்.எல்.ஏக்களை கர்நாடகாவுக்கு அனுப்பி வைத்தது சரியானதுதான். மோடி அரசுக்கு எதிரான ஒரு அதிருப்தி அலை வரும் காங்கிரஸ் நினைத்து காத்திருந்தால் நிச்சயம் அது தவறானது.
வித்தியாசம் தேவை
மோடியும் அமித்ஷாவும் வித்தியாசமாக சிந்திக்கின்றனர்; செயல்படுகின்றனர். நாமும் நமது அணுகுமுறையில் மென்மைப் போக்கை கடைபிடிக்காவிட்டால் காங்கிரஸ் தகுதியற்றதாகிவிடும் என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்க வேண்டும் என விரும்புகிறோம். 2018 தேர்தலையாவது ராகுல் காந்தி தலைமையில் எதிர்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.