ஆதரவு தாங்க.. சுயேச்சைகளுக்கு வலை விரிக்கும் ராஜஸ்தான் காங்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆட்சி அமைப்பதற்காக இதர கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. அந்த மாநிலத்தில் மொத்தம் 199 தொகுதிகளில் காங்கிரஸும் பாஜகவும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தன.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 93 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அது போல் பாஜக 84 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இங்கு தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 100 தொகுதிகளின் வெற்றி தேவைப்படுகிறது.
காங்கிரஸ் எடுத்துள்ளதோ 93 இடங்களில் முன்னிலை. சுயேச்சைகள் 12 இடங்களிலும், இதர கட்சிகள் 9 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர். தனிப்பெரும்பான்மையை பெற இன்னும் 7 தொகுதிகளே காங்கிரஸ் கட்சிக்கு தேவை.
எனவே ஆட்சி அமைப்பதற்காக பாஜகவுக்கு எதிரான கட்சிகளிடம் காங்கிரஸ் இப்போதே பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுயேச்சைகளுக்கு முக்கியமாக குறி வைத்துள்ளது காங்கிரஸ். இதில் காங்கிரஸுக்கு சாதகமான சூழல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.