கர்நாடகா: காங். தனிப்பெரும் கட்சியாக வரும்.. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது - சர்வே
கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபை அமையவே அதிக வாய்ப்பு இருப்பதாக இந்தியா டுடே கார்வி சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.
Recommended Video
பெங்களூரு : கர்நாடகாவில் பாஜகவின் வாக்குவங்கி சதவீதம் அதிகரித்திருந்த போதும் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பது சிரமம் என்றும் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கின்றன. காங்கிரஸ் கட்சி 90 முதல் 101 இடங்களில் வென்று தொங்கு சட்டசபை அமையவே வாய்ப்புகள் இருப்பதாகவும் கருத்துக்கணிப்பு சொல்கிறது.
224 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநிலத்திற்கு மே 12ல் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் அடுத்த 5 ஆண்டுகள் இந்த மாநிலத்தில் ஆட்சி நடத்தப் போவது யார் என்ற முடிவை மக்கள் தெரிவிக்க உள்ளனர். தென் மாநிலங்களில் பாஜக தனது பலத்தை நிரூபிக்கும் விதமாக கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அந்தக் கட்சியின் தேசிய செயலாளர் அமித்ஷா கர்நாடகா முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் 17 முதல் ஏப்ரல் 5 வரையிலான கால கட்டத்தில் பல்வேறு தரப்பு மக்களிடம் தேர்தல் குறித்து இந்தியா டுடே கார்வி இணைந்து கருத்துக்கணிப்புகளை நடத்தியுள்ளன. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
வாக்கு வங்கி சதவீதம் உயர்வு
இந்த முடிவின் படி கர்நாடகாவில் பாஜகவின் வாக்குவங்கியானது அதிகரித்திருக்கிறது. ஆனால் இந்த வாக்கு வங்கி அதிகரிப்பு சதவீதம் பாஜகவை ஆட்சியில் அமர வைக்காது என்றும் கூறுகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் சுமார் 35 சதவீத வாக்காளர்கள் பாஜகவிற்கு வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர்.
2013 தேர்தல் முடிவுகள்
2013ல் எடியூரப்பா கட்சியை விட்டு விலகியதால் பிளவு ஏற்பட்டது, ஆனால் அதன் பின்னர் அவர் மீண்டும் பாஜகவில் சேர்ந்து தற்போது முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த பாஜக 2013 சட்டசபை தேர்தலில் 33 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 122 இடங்களில் வெற்றி பெற்று 37 சதவீத வாக்குகளையும் பெற்றது.
தொங்கு சட்டசபையே அமையக்கூடும்
2018 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதே சதவீதத்திலான வாக்குகள் கிடைத்தாலும் 90 முதல் 101 இடங்களை மட்டுமே வெல்ல முடியும் என்று கருத்துக்கணிப்பு சொல்கிறது. அதே சமயம் பாஜக கடந்த தேர்தலில் 50 இடங்களை மட்டுமே பிடித்த நிலையில் இந்தத் தேர்தலில் 78 முதல் 86 இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. எனவே கர்நாடகாவில் ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபையே அமையும் நிலை உள்ளது.
ம.ஜ.தவின் முக்கிய பங்கு
மதசார்பற்ற ஜனதாதளம்-பகுஜன் சமாஜ் கூட்டணி 34 முதல் 43 தொகுதிகளை கைப்பற்றக் கூடும். ஆட்சியமைப்பதில் ம.ஜ.த முக்கிய பங்கு வகிக்கப்போகிறது என்று சர்வே முடிவுகள் சொல்கின்றன.