கர்நாடாகவில் காங்கிரஸ் செய்த கொடுமைகளுக்கு மே 12ல் மக்கள் தீர்ப்பு: மோடி
காங்கிரஸ் கர்நாடாகவில் இதுவரை செய்த கொடுமைக்கு எல்லாம் மே 12ல் மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
மங்களூரு : காங்கிரஸின் ஆட்சியில் கர்நாடகாவில் மாஃபியா கும்பல்களின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. இதற்கு எல்லாம் வருகிற மே 12ம் தேதி மக்கள் தீர்ப்பு வழங்க இருக்கிறார்கள் என்று பிரதமர் மோடி மங்களூருவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசியுள்ளார்.
கர்நாடகாவில் வருகிற மே 12ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டு கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், கர்நாடகாவின் மங்களூருவில் பிரசாரம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பேசுகையில், காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகம் மிகவும் மோசமாக நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
இங்கு இருந்த ஆட்சியாளர்கள் மக்களை விட மாஃபியா கும்பல்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதனால் மாநிலம் சீரழிந்து உள்ளது. இதற்கு எல்லாம் மே 12ல் மக்கள் தீர்ப்பு வழங்க உள்ளார்கள் என்று குறிப்பிட்டார்.
மேலும், மத்திய பாஜக அரசு செயல்படுத்தியுள்ள எண்ணற்ற நலத்திட்டங்களால் மக்கள் பெரிதளவில் பயனடைந்து உள்ளார்கள். அதை முழுமையாக செயல்படுத்த கர்நாடக மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும்.
மாநிலங்களில் பல இடங்களில் பாஜக தொண்டர்கள் கொலை செய்யப்பட்டு உள்ளார்கள். ஆனால், அதற்கான நீதி கிடைக்கவில்லை. மே 15ம் தேதி பாஜக அரசு பதவியேற்றதும், அந்த கொலைகாரர்கள் மீது வழக்குப் பதியப்படும் . இனியும் அவர்கள் சட்டத்தின் கைகளில் இருந்து தப்பிக்க முடியாது .
காங்கிரஸ் என்பது கட்சியல்ல; அது ஒரு குடும்ப சொத்து. அவர்கள் அதற்காக மட்டுமே உழைக்கிறார்கள். ஆனால், நான் இந்த நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காவும் உழைக்கிறேன் என்பதை மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள்.
காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளை மக்கள் நம்பப்போவது இல்லை. அது இந்தத் தேர்தல் வெற்றியின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்படும் என்று மோடி தெரிவித்தார்.
சித்ரதுர்கா, ராய்ச்சூர், பாகல்கோட் மற்றும் ஹூப்ளியில் நடைபெறவுள்ள பேரணிக்கூட்டங்களில் இன்று பிரதமர் நரேந்திர மோடி வாக்கு சேகரிக்க உள்ளார்.