திமுகவுக்கு குட்பை... கர்நாடகாவில் உதயமானது காங்- தினகரன் கட்சி கூட்டணி!
கர்நாடகா தேர்தலில் காங்கிரஸை ஆதரித்து தினகரன் கட்சியினர் பிரசாரம் செய்தனர்.
பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் படுதீவிரமாக பிரசாரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தினகரன் கட்சியின் கர்நாடக பொறுப்பாளர் புகழேந்தி, அம்மாநில தமிழர்களிடம் அறிமுகமானவர். காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவினர், புகழேந்தியை அணுகி பேசினர்.
இது தொடர்பாக தினகரனிடம் ஆலோசித்திருக்கிறார் புகழேந்தி. அதில், காங்கிரசை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதுடன் கட்சி தொண்டர்களை காங்கிரஸுக்கு வாக்களிக்கும் வகையில் ரகசிய பணிகளில் ஈடுபடலாம் என புகழேந்திக்கு அட்வைஸ் செய்திருக்கிறார் தினகரன்.
இதனையடுத்து, பாஜகவுக்கு எதிராக வெளிப்படையாகவே காங்கிரசை ஆதரித்து களமிறங்கினார் புகழேந்தி. மேலும், தமிழகத்திலிருந்து தினகரன் கட்சியை சேர்ந்த சுமார் 2000 தொண்டர்களை கர்நாடகவுக்கு வரவழைத்திருக்கிறார் புகழேந்தி.
அவர்களை 20 டீமாக பிரித்து தமிழர்கள் பகுதிக்குள் களமிறக்கியிருக்கிறார். ஏற்கனவே, 'தினகரனோடு கூட்டணி வைக்கவே திமுகவுடன் திருநாவுக்கரசர் முரண்பாடுகளையும் சர்ச்சைகளையும் வளர்த்து வருகிறார்' என்கிற குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலில் எதிரொலிக்கும் நிலையில், கர்நாடக தேர்தலில் காங்கிரசை ஆதரிக்கும் நிலைப்பாட்டை தினகரன் எடுத்து புகழேந்தி மூலம் செயல்படுத்தியிருப்பதை உளவுத்துறையினர் உன்னிப்பாக கவனித்துள்ளனர்.
மேலும் பாஜகவை வீழ்த்தும் சக்தி காங்கிரசுக்கு மட்டுமே இருப்பதால் காங்கிரசை ஆதரிக்கிறோம். இதனால் காங்கிரசுடன் கூட்டணி என்பதல்ல" என சொல்லி வருகிறாராம் புகழேந்தி. இந்த நிலையில், காங்கிரசுக்கு ஆதரவாக தினகரன் தரப்பு செயல்பட்டிருப்பதை பாஜக தலைமைக்கு சொல்லப்பட்டிருக்கிறதாம். தமிழர்கள் பகுதியில் பாஜகவுக்காக தேர்தல் பணியில் ஈடுப்பட்டிருந்த தமிழக பாஜக பிரமுகர்கள், காங்கிரசுக்கு ஆதரவாக தினகரன் தரப்பினர் ஈடுப்பட்டிருந்தை நேரடியாகக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அதனை தேர்தல் களத்தில் இருந்த அமித்ஷாவின் கவனத்துக்கு கொண்டுசென்றபோது, தேர்தலுக்குப் பிறகு ஆலோசிக்கலாம் என சாதாரணமாக சொன்னாராம் அமித்ஷா என்கிறார்கள் தமிழக பாஜகவினர்.