அப்சல் குரு ஜி, பகுத் அச்சா ஜி.. தீவிரவாதிக்கு 'ஜி' போட்டு மரியாதை கொடுத்த காங். தலைவர்!
டெல்லி: பிரஸ் மீட்டின்போது, தீவிரவாதி அப்சல் குருவை மிகவும் மரியாதையாக 'ஜி' என்ற வார்த்தையை பயன்படுத்தி அழைத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரன்தீப் சுர்ஜேவாலா தனது பேச்சை வாபஸ் பெற்றுள்ளார்.
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு தூக்கிலிடப்பட்டுள்ள நிலையில், அவனை புகழ்ந்து, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஒரு பிரிவு மாணவர்கள் நிகழ்ச்சி நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் அந்த மாணவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்ததோடு, பல்கலைக்கழகத்திற்கு நேரிலும் சென்றார். இந்த சர்ச்சை குறித்து பேட்டியளித்த ரன்தீப் சுர்ஜேவாலா, உரிய முறையில் விசாரணை நடத்தி தண்டனை கொடுப்பதில் தப்பில்லை. அவசரத்தில் அப்சல் குரு 'ஜி'க்கு தண்டனை கொடுத்துவிட்டனர் கூறியிருந்தார்.
ஹிந்தியில் மரியாதைக்குறியவரை ஜி என்ற துணை சொல்போட்டு அழைப்பது வழக்கம் என்பதால் ரன்தீப் சுர்ஜேவாலா பேட்டி சர்ச்சையை உருவாக்கியது. தீவிரவாதிகளுக்கு காங்கிரஸ் கட்சி மிகுந்த மரியாதையும், ஆதரவும் கொடுப்பதாக பாஜக குற்றம்சாட்டியது.
இதுகுறித்து ரன்தீப் சுர்ஜேவாலா இன்று அறித்துள்ள விளக்கத்தில், நாக்கு பிறழ்ந்து இவ்வாறு ஜி என்று கூறிவிட்டதாகவும், பிறரை அப்படி அழைக்கும் பழக்க தோசத்தில் அப்சல் குருவையும் அப்படி அழைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.