ஹஜ் மானியத்தால் முஸ்லிம்களுக்கு பலனில்லை.. மானிய ரத்துக்கு காங்கிரஸ் வரவேற்பு
ஹஜ் பயணத்திற்கு அளிக்கப்பட்டு வந்த மானியம் ரத்து செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சி சார்பில் குலாம் நபி ஆசாத் வரவேற்றுள்ளார்
Recommended Video
டெல்லி : ஹஜ் பயணத்திற்கு அளிக்கப்பட்டு வந்த மானியம் ரத்து செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. அதே நேரம் அதற்கான தொகை சிறுபான்மையினரின் நலன் மற்றும் கல்விக்கு செலவிடப்படுமா என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
இஸ்லாமியர்களின் புனித யாத்திரையான ஹஜ் பயணத்திற்கு வழங்கப்பட்டு வந்த மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ரத்துசெய்யப்பட்ட மானியம் நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் என கூறி இருந்தார்.
இதுகுறித்து நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் குலாம் நபிஆசாத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் உச்சநீதிமன்றம் 2012ம் ஆண்டு வெளியிட்ட தீர்ப்பின்படியே ஹஜ் பயணத்திற்கான மானியம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என்று குறிப்பிட்டார்.
மேலும், அதே தீர்ப்பில் ஹஜ் பயணத்திற்கான மானியம் படிப்படியாக குறைக்கப்பட்டு 2022ம் ஆண்டு முழுமையாக குறைக்கப்பட வேண்டும் என்று அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி அப்தாப் ஆலம் அறிவித்தார்.
ஆனால், அதே தீர்ப்பில் ரத்து செய்யப்படும் மானியமானது முஸ்லீம் மக்களின் நல்வாழ்வு மற்றும் கல்விக்கு செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்து இருந்தார். தற்போது மானியத்தை ரத்து செய்துள்ள அரசு, அந்த தீர்ப்பின்படி செயல்படுமா என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் அவர் இதுகுறித்து பேசுகையில், ஹஜ் பயணத்திற்கு அளிக்கப்பட்ட மானியத் தொகையால் முஸ்லீம்கள் பயன்பெறவில்லை. மாறாக விமான சேவை நிறுவனங்கள் தான் அதில் பலனடைந்து வந்தன. என்பதையும் இந்த அரசு நினைவில் கொள்ளவேண்டும்.
மானிய தொகை ரத்து செய்யப்பட்ட பிறகும் அதே பழைய கட்டணத்தில் விமானங்கள் இயக்கப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.
ஹஜ் மானிய திட்ட ரத்து என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தான், அதைத் தான் இந்த அரசு செயல்படுத்தி இருக்கிறது. எனவே இந்த நடவடிக்கையில் நாங்கள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே வரவேற்கிறோம் என்றும் குலாம் நபி ஆசாத் தெரிவித்து உள்ளார்.