தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி.. ரஜினி, கமல் அரசியல் பற்றி திருநாவுக்கரசரிடம் கேட்டறிந்தார்
கர்நாடக சட்டசபைத் தேர்தலை அடுத்து காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த தமிழகத்தில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.
டெல்லி : காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில், கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகத்தின் அரசியல் நிலவரங்களை ராகுல் காந்தி உன்னிப்பாக கேட்டறிந்தார்.
மேலும், வருகிற மே 12ம் தேதி நடக்கவுள்ள கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த தமிழகத்தில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்தும், கமல், ரஜினி அரசியல் குறித்தும் ராகுல்காந்தி கேட்டறிந்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த தமிழகத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருப்பதாகவும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் மிகப்பெரிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.