ஊடலுக்கு பின்னர் முதல் சந்திப்பு,,,சச்சின் அசோக் கெலாட்... ராஜஸ்தானில் அரசியல் மாற்றம்!!!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை நாளை கூட இருக்கும் நிலையில் இன்று முதல்வர் அசோக் கெலாட் வீட்டில் அவரை முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் சந்தித்துப் பேசினார். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்புக்குப் பின்னர் முதன் முறையாக இருவரும் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். இதன் மூலம் கடந்த சில மாதங்களாக ராஜஸ்தானில் நிலவி வந்த காங்கிரஸ் அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளது.
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே மோதல் வெடித்தது. இதற்கு காரணம் பாஜகதான் என்று முதலில் அசோக் கெலாட் குற்றம்சாட்டி இருந்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி, காங்கிரஸ் ஆட்சியை பாஜக கவிழ்க்க சதி செய்கிறது என்று குற்றம்சாட்டி இருந்தார். பின்னர், கட்சி நடவடிக்கைகளுக்கு கட்டுப்படவில்லை என்று சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம் செய்யப்பட்டார். பாஜவில் இணைய முயற்சித்து தோல்வி அடைந்தார். பாஜகவில் இவரது இணைப்பை அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வசுந்தரதாஜே சிந்தியா விரும்பவில்லை என்று கூறப்பட்டது. இதனால், சச்சினுக்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி கொடுத்தனர்.
திரும்பவும் காங்கிரஸ் கட்சிக்கு வருவதைத் தவிர சச்சின் பைலட்டுக்கு வேறு வழியில்லை. இதையடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை டெல்லியில் சந்தித்துப் பேசினார். இதற்குப் பின்னர் கட்சிக்கு திரும்புவது குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருந்தார்.
டெல்லியில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரையும் சச்சின் பைலட் சந்தித்துப் பேசியபோது மூன்று கோரிக்கைகளை வைத்தார்.
- எதிர்கால முதல்வர் சச்சின் பைலட் என்று அதிகாரபூர்வமாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
- இல்லையென்றால், தனது ஆதரவாளர்களில் மூத்த தலைவர்களில் இருவரை துணை முதல்வர்களாக்க வேண்டும். மற்றவர்களுக்கு அமைச்சர் பதவி, போர்டு டிரஸ்ட் பொறுப்பு, கார்பரேஷனில் பொறுப்பு வழங்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ் பொதுச் செயலாளராக சச்சினுக்கு பதவி வழங்க வேண்டும்.
- இந்த அறிவிப்புகளை காங்கிரஸ் அறிக்கையில் ராகுல் காந்தி அறிவிக்க வேண்டும் என்று மூன்று கோரிக்கைகளை வைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவற்றில் சிறப்பு குழுவை அமைக்க காங்கிரஸ் மேலிடம் ஒப்புக்கொண்டு இருப்பதாக செய்தி வெளியாகி இருந்தது. இந்த சிறப்புக் கமிட்டியில் பிரியங்கா காந்தி, அஹ்மத் பட்டேல், கேசி வேணுகோபால் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
இந்த நிலையில், ராஜஸ்தான் சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு இன்று ஜெய்பூரில் இருக்கும் அசோக் கெலாட் வீட்டில் இரு தலைவர்களின் சந்திப்பு நடந்தது. சச்சினை அசோக் கெலாட் கைகுலுக்கி வரவேற்றார். பின்னர் இவர்கள் சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டு இருந்தனர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு தடை.. இந்து முன்னணி கண்டனம்