சுனந்தா புஷ்கர மரண வழக்கு: தற்கொலைக்கு தூண்டிய சசிதரூர் குற்றவாளி-குற்றப்பத்திரிகையில் டெல்லி போலீஸ்
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி-யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சசிதரூர் இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். பின்னர் காஷ்மீர் தொழிலதிபர் சுனந்தா புஷ்கரை(52), காதலித்து மணந்தார்.
பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் உடன், சசிதரூர் இணைத்து பேசப்பட்ட நிலையில், சசிதரூர் - சுனந்தா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக 2014 ஜனவரி 17-ந் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா ஹோட்டல் அறையில் சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அவர் விஷம் குடித்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல விவாதங்கள் நடந்தன. இந்த வழக்கை டெல்லி போலீஸ் தீவிரமாக விசாரித்து வந்தது.
இந்நிலையில் பாட்டியாலா நீதிமன்றத்தில் மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் தர்மேந்தர் சிங்கிடம், டெல்லி போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் சுனந்தா புஷ்கரின் மரணம் தற்கொலையே. கொலை அல்ல என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் சசிதரூர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், கொடுமைப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே சசிதரூர் குற்றவாளி என நீதிமன்றம் சம்மன் அனுப்ப வேண்டும் என்றும் டெல்லி போலீஸ் வலியுறுத்தியுள்ளது.
4 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதால் சசி தரூருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. விசாரணை வரும் 24-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.