அமெரிக்காவில் போய் மோடி இப்படி பேசலாமா.. இந்திய வெளியுறவு கொள்கை காற்றில் பறந்தாச்சு.. காங். கோபம்
டெல்லி: ஹவுடி மோடி நிகழ்ச்சியில், இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார் என்று காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரத்தில் நேற்று இந்திய நேரப்படி இரவு 8.30 மணி அளவில் ஹவுடி மோடி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்றனர். அந்த நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
இந்தியாவின் அழகே பல மொழியும், கலாச்சாரமும்தான்.. அமெரிக்காவில் மோடிக்கு ஏற்பட்ட திடீர் மனமாற்றம்
அமெரிக்க தேர்தல்
ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார். அடுத்த ஆண்டு அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியை பயன்படுத்திக்கொண்டு அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் வாக்கு வேட்டையாடுவதற்கு டிரம்ப் திட்டமிட்டுதான் காய் நகர்த்தி உள்ளார், என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அதை நிரூபிப்பது போல, மோடியின் உரை அமைந்துவிட்டது.
ஆப் கி பார் ட்ரம்ப் சர்க்கார்
மோடி தனது உரையின்போது, இந்தியாவில் உள்ள மக்கள் டொனால்ட் ட்ரம்ப் மீது, நல்ல அபிப்பிராயம் வைத்துள்ளனர். 'ஆப் கி பார் ட்ரம்ப் சர்க்கார்' என்ற கோஷம் இந்தியாவில் பெருகி வருகிறது, என்று தெரிவித்தார். இதன் மூலம், மீண்டும் அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவர் தெரிவித்தார்.
|
வெளியுறவு கொள்கை
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா இன்று ட்விட்டரில், தனது ஆட்சேபனையை தெரிவித்தார். நீண்ட காலமாக இந்தியா பின்பற்றி வரக்கூடிய வெளியுறவு கொள்கையை இந்திய பிரதமர் இப்போது மதிக்க தவறிவிட்டார். எந்த ஒரு நாட்டு தேர்தலிலும் இந்தியா தலையிடுவதில்லை என்பது நமது கொள்கை. ஆனால் அமெரிக்க தேர்தல் தொடர்பாக மோடி தனது விருப்பத்தை தெரிவித்து இந்த விதிமுறைகளை மீறி உள்ளார்.
|
நட்பு நாடு
அமெரிக்காவில் உள்ள குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுடனும் இந்திய அரசு நட்பு பாராட்டி வருகிறது. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் என்ற ஒருவருக்காக மோடி பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பது, இந்தியா மற்றும் அமெரிக்க இறையாண்மைக்கு எதிரானது. இவ்வாறு ஆனந்த் சர்மா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தல்
ஆப் கி பார் ட்ரம்ப் சர்க்கார் என்பது 2016ஆம் ஆண்டு ஜனநாயக இந்து கூட்டணி என்ற அமைப்பால் முன்வைக்கப்பட்டது. ட்ரம்ப் இதற்கு ஆதரவு தெரிவித்தார். அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் ஆதரவை பெறுவதற்காக இந்து இயக்கம் இவ்வாறு ஒரு கோஷத்தை முன்வைத்து இருந்தது. இப்போது மோடியும் அதே கோஷத்தை அடுத்த தேர்தலுக்காக முன் வைத்துள்ளது, குறிப்பிடத்தக்கது.