நாய் போல் சாவேனாம்.. ராவணன், ஹிட்லர்! காங்கிரஸ் தலைவர்கள் போட்டிபோட்டு திட்டுறாங்க - “எமோசன்”ஆன மோடி
காந்திநகர்: காங்கிரஸ் தலைவர்கள் தன்னை திட்டி பேசுவதில் போட்டிபோடுவதாக குஜராத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசி உள்ளார்.
குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. அதே நேரம் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார். அடுத்தடுத்து தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்துகொண்டு வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு திரட்டி வருகிறார்.
பிரதமர் மோடி பிரச்சாரம்
அந்த வகையில் பஞ்ச்மஹால் மாவட்டத்தின் கலோ பகுதி அருகே அமைந்து இருக்கும் வெஜால்புர் பகுதியில் நடைபெற்ற பாஜகவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் தன் மீது காங்கிரஸ் தலைவர்கள் முன்வைத்த விமர்சனத்துக்கு பதிலளித்தார்.
மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பதில்
மோடி 100 தலைகளை கொண்ட ராவணனா என்று கேட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பதிலளித்த அவர், "ராம பக்தர்கள் நிறைந்த இந்த பூமியில் ஒருவரை பார்த்து ராவணன் என்று அழைப்பது தவறானது." தொடர்ந்து அவர் பேசுகையில் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் தன்னை பற்றி தெரிவித்த கருத்துக்களையும் சுட்டிக்காட்டினார்.
காங்கிரஸ் குற்றச்சாட்டுகள்
"சில நாட்களுக்கு முன் ஒரு காங்கிரஸ் தலைவர் மோடி நாய் போல் இறந்து கிடப்பார் என்றார். மற்றொரு தலைவர் எனக்கு ஹிட்லரின் மரணம் வரும் எங்கிறார். இன்னொரு தலைவரோ எனக்கு வாய்ப்பு கிடைத்தால் மோடியை கொலை செய்துவிடுவேன் என்கிறார். மேலும் ஒருவர் என்னை ராவணன் என்று அழைக்கிறார். வேறு தலைவர் என்னை ராட்சசன் என்று கூறுகிறார். கரப்பான்பூச்சி என்று ஒருவர் சொல்கிறார்.
ஆச்சரியம் இல்லை
மோடியின் பெயரை காங்கிரஸ் இதுபோல் அழைப்பதில் எனக்கு ஆச்சரியம் ஏதும் இல்லை. இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதில் காங்கிரஸுக்கு வருத்தம் ஏதும் இல்லை என்பதை நினைத்துதான் நான் ஆச்சரியப்படுகிறேன். இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடியை விமர்சிப்பதை தங்களின் உரிமை என்று காங்கிரஸ் கட்சி நினைக்கிறது.
மன்னிப்பு கேட்க மறந்துவிட்டார்கள்
மேலும் அவர்கள் எனக்கு எதிராக இதுபோன்ற அவதூறான வார்த்தைகளை பயன்படுத்திவிட்டு எந்த வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை. மன்னிப்பு கேட்பதையே அவர்கள் மறந்துவிட்டார்கள். நாட்டின் பிரதமரை இழிவுபடுத்துவதையும் தங்களின் உரிமை என அவர்கள் நினைத்துவிட்டார்கள். என்று கூறினார்.
என்ன சொன்னார் கார்கே?
அகமதாபாத்தின் பெஹ்ராம்புரா தொகுதியில் கடந்த சில நாட்கள் முன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் புதிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, "நாம் மாநகராட்சி தேர்தல்களில் மோடியின் படத்தை பார்த்தோம். லோக் சபா தேர்தல்களிலும் மோடியின் படத்தை பார்த்தோம். தற்போது சட்டசபைத் தேர்தலிலும் மோடியின் படங்களையே பார்க்கிறோம். எங்கும் அவர் படங்களே உள்ளன. ராவணன் போல் மோடிக்கு என்ன 100 தலைகள் உள்ளனவா? வாக்குகள் மோடியின் பெயராலேயே பெறப்பட்டு வருகின்றன." என்று கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.