குஜராத்தில் மோடி தேர்தல் விதிகளை மீறவில்லை.. தேர்தல் ஆணையத்திடம் பாஜக விளக்கம்
வாக்குப்பதிவின் போது மோடி தேர்தல் விதிகளை மீறியதாக காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து உள்ளது .
அகமதாபாத் : தேர்தல் நடக்கும்போது பேரணி போல் மோடி சென்றது குறித்து காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து உள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க சார்பில் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
குஜராத் மாநில சட்டசபைக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. இதில் இன்று காலை அகமதாபாத் அருகே உள்ள ராணிப் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார் பிரதமர் மோடி.
வாக்களித்த பின்னர், மை வைக்கப்பட்ட விரலை தூக்கி காட்டியபடியே சாலையில் நடந்து சென்றார். பின்னர் சாலையில் இருந்த காரில் ஏறிச் சென்றார் மோடி. இதனைப் பார்த்து அங்கு வாக்களிக்க வந்த மக்கள் மோடிக்கு ஆதரவாக கோஷம் போட்டனர்.
மோடியின் பாதுகாப்பு வாகனங்கள், போலீஸாரின் வாகனங்களால் மோடியின் அந்த பயணம் பேரணி போல் இருந்ததாகவும், கை காட்டியபடியே சாலையில் நடந்து சென்றது பிரச்சாரம் போன்று காணப்பட்டதாகவும் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் விதிமீறல் புகார் அளிக்கப்பட்டது.
மேலும், நேற்று ராகுல் காந்தியின் பேட்டியை ஒளிபரப்பியதால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குத்தொடர அனுமதி அளித்த தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் ஏன் மௌனம் காக்கிறது என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க அமைச்சர்கள் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்து உள்ளனர். மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன் ஆகியோர் டெல்லி தேர்தல் அலுவலகம் வந்து உள்ளனர். மேலும் காங்கிரஸின் குற்றச்சாட்டை அவர்கள் மறுத்து உள்ளனர்.
வாக்குச்சாவடிக்கு முன்னதாகவே வாகனங்களை நிறுத்தி விட வேண்டும் என்கிற விதியை பின்பற்றியதாகவும், ஓட்டு போட்டதன் அடையாளமாகவே கையை மோடி உயர்த்திக் காட்டியதாகவும் இதில் வேறு எந்த அர்த்தமும் இல்லை என்று அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, அகமதாபாத் தேர்தல் அதிகாரி விரிவான அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது . அறிக்கைக்கு பிறகு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது .