எஸ்.சி., எஸ்.டி, வன்கொடுமை தடுப்பு சட்டம்.. மத்திய அரசுக்கு எதிராக காங். எம்.பி.க்கள் தர்ணா
டெல்லி: எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை சட்டம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து, சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று, வலியுறுத்தி, ராகுல் காந்தி தலைமையில், காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் புகார்களிலும் விசாரணையின்றி கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் அமர்வு முதன்முறையாக முன் ஜாமின் வழங்கியது. எந்த கைது நடவடிக்கைக்கு முன்னரும் அடிப்படையான விசாரணை நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து எஸ்.சி., எஸ்.டி, வன்கொடுமை சட்டம் வலுவிழந்துவிட்டதாக தாழ்த்தப்பட்டோர் ஆர்வலர்களும், அவ்வமைப்பினரும் ஆதங்கம் தெரிவித்து வருகிறார்கள்.
மத்திய அரசு உடனடியாக இந்த விஷயத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று, வலியுறுத்த தொடங்கியுள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, ராகுல் காந்தி தலைமையில், நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை எதிரே காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று தர்ணா நடத்தினர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.