சத்திஸ்கர் மாநில கட்சி தலைவர் பதவியை பறித்த காங்.,.. கண்ணீர் விட்டு அழுத முதல்வர் பூபேஷ் பாஹல்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில முதல்வர் பூபேஷ் பாஹல், திடீரென கண்ணீர் விட்டு அழுதது உருக்கமாக இருந்தது.
சத்தீஸ்கர் மாநில முதல்வரான பூபேஷ் பாஹல் தான் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்து வந்தார். நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில், சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை, டெல்லி காங்கிரஸ் மேலிடம் பூபேஷ் பாஹலிடமிருந்து பறித்து கொண்டது.
கடந்த ஆண்டு அம்மாநிலத்தில் நடைபெற்ற பேரவை தேர்தலில், திடீர் எழுச்சி கண்ட காங்கிரஸ் மூன்று முறை ஆட்சியில் இருந்த பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியது. இந்த அபார வெற்றிக்கு காங்கிரஸ் தலைவராக இருந்த பூபேஷ் பாஹல் தான் காரணம் என்று நினைத்த காங்கிரஸ், அவரை மாநில முதல்வராக்கி அழகு பார்த்தது.
ஆனால் சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள், பூபேஷ் பாஹல் மீதான பார்வையை அப்படியே தலைகீழாக புரட்டி போட்டுவிட்டது. இதனையடுத்து பூபேஷ் பாஹலிடம் இருந்த காங்கிரஸ் கட்சி தலைவர் பறிக்கப்பட்டு, மோஹன் மர்காமிடம் அளித்தது காங்கிரஸ் மேலிடம்.
இந்நிலையில் அம்மாநில காங்கிரஸ் கட்சி கமிட்டியின் தலைவராக இருந்த முதல்வர் பாஹல், கட்சி பொறுப்புகளை புதிய காங்கிரஸ் தலைவரான மோஹன் மர்காமிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது தனக்கு உறுதுணையாக இருந்த கட்சி நிர்வாகிகளை பாராட்டி பேசிய போது கண்கலங்கி அழுதார். பூபேஷ் பாஹல் மைக்கின் முன் கண்ணீர் சிந்தியதை பார்த்த தொண்டர்களும் சற்று நேரம் சோகமடைந்தனர்.
#WATCH Chhattisgarh Chief Minister Bhupesh Baghel who was also the Congress President of the party's state unit, tears up remembering the contribution of members, at an event passing the post to Mohan Markam in Raipur. (June 29) pic.twitter.com/O70Uuchu8P
— ANI (@ANI) June 29, 2019
விழாவில் பேசிய பூபேஷ் கடந்த 2013-ம் ஆண்டில் மாநில சட்டமன்ற தேர்தலில் நாம் தோல்வி அடைந்தோம். பின்னர் வந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் கடுமையாக உழைத்தும் தோல்வியுற்றோம்.ஆனால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், தலைவர்களின் அயராத முயற்சியால், சத்திஸ்கரில் தற்போது காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது.
சத்தீஸ்கரில் நாம் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக கடுமையாக உழைத்தோம். கடந்த 5 வருடங்கள் என்னுடன் இணைந்து பணியாற்றி, அனைத்து தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார். 6 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விட்டு செல்வது வருத்தமாக இருப்பதாக கூறி கண்ணீர் விட்டு அழுதது விழாவில் கூடியிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
தொடர்ந்து பேசிய பாஹல் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மோஹன், மிக எளிமையான மனிதர் மற்றும் கடுமையாக உழைக்க கூடியவர் என பாராட்டி பேசினார்.