குஜராத் எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட்டில்.. தம்பதி போல வந்து வேவு பார்த்த ரிபப்ளிக் டிவி டீம்
குஜராத் எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட்டில் வேவு பார்க்க போய் வசமாக சிக்கியிருக்கிறது அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி டீம்.
பெங்களூரு: குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் பிடாதி ரிசார்ட்டுக்குள் கணவன் மனைவி போல நுழைந்து வேவு பார்க்க முயன்ற ரிபப்ளிக் டிவி செய்தியாளரும் கேமராமேனும் காங்கிரஸ் பிரமுகர் மிலிந்த தர்மசென்னிடம் சிக்கியுள்ளனர்.
குஜராத் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலை தோற்கடிக்க எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் வேலையை பாஜக செய்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 44 பேர் பெங்களூரு அருகே பிடாதி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து வந்த கர்நாடகா அமைச்சர் சிவக்குமார் வருமானவரி சோதனையில் சிக்கியுள்ளார். இந்த நிலையில் காங்கிரஸ் பிரமுகரான மிலிந்த தர்மசென் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
அதில், ரிபப்ளிக் டிவியின் செய்தி தொகுப்பாளர் பிரேமா ஸ்ரீதேவியும் அவரது கேமராமேனும் ஈகிள்டன் ரிசார்ட்டுக்கு கணவன் மனைவி போல் வந்தனர். ஆனால் அவர்கள் என்னிடம் வசமாக சிக்கிக் கொண்டனர். அவர்களது திட்டம் பலிக்கவில்லை என பதிவிட்டுள்ளார்.
டைம்ஸ் நவ் டிவியில் இருந்த அர்னாப் கோஸ்வாமி நடத்துவதுதான் ரிபப்ளிக் டிவி. ரிபப்ளிக் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு செய்வதாக அண்மையில் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.