ஆர்.ஜே.டியுடனான கூட்டணி அமையாவிட்டால் ஐ. ஜனதா தளத்துடன் கை கோர்க்கும் காங்கிரஸ்?
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணி அமையாது போனால் ஐக்கிய ஜனதா தளத்தை காங்கிரஸ் ஆதரிக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டின் இறுதியில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
பீகாரில் பாரதிய ஜனதா ஆட்சியைக் கைப்பற்றுவதைத் தடுக்க ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள முயற்சிக்கின்றன. ஆனால் நிதிஷ்குமாரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட காரணங்களால் இரு கட்சிகளிடையே கூட்டணி உருவாகுமா என்ற நிலைமை எழுந்துள்ளது.
இந்த நிலையில் பீகார் சட்டசபை தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமையன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவுத்ரி கலந்து கொண்டார்.
ராஷ்டிரிய ஜனதா தளம்- ஐக்கிய ஜனதா தளம் இடையேயான கூட்டணி உருவாவதற்கான சூழ்நிலை குறித்து இதில் ஆராயப்பட்டது. பொதுவாக பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கை கோர்ப்பதில் ஆர்வம் காட்டி வந்த காங்கிரஸ் இம்முறை ஐக்கிய ஜனதா தளம் பக்கம் சாய்வது என முடிவெடுக்க உள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்டிரிய ஜனதா தளம் இடையே கூட்டணி அமையாத நிலையில் ஐக்கிய ஜனதா தளத்துடன் கை கோர்க்கலாம் எனவும் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பீகார் அரசியலில் புதிய கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.