நன்றி சொல்ல வந்த ராகுல் காந்திக்கு.. முத்தம் கொடுத்த காங். நிர்வாகி.. பேரணியில் பரபரப்பு
கோழிக்கோடு: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ் கட்சிக்கு ஆறுதல் தந்த மாநிலங்கள் என்றால் தமிழ்நாடும் கேரளாவும் தான். கேரளாவில் போட்டியிட்ட 16 இடங்களில் 15 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் இங்குதான் வெற்றி பெற்றார். தன்னையும் தன் கட்சியையும் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி சொல்லியபடி கோழிக்கோடு பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் ராகுல் காந்தி சென்றார். அப்போது ஒருவர் ராகுல் காந்திக்கு உணர்ச்சி பெருக்கில் கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இந்தியா முழுவதும் சேர்த்தே 52 இடங்களில் தான் வெற்றி பெற்றுள்ளது. இதனால் சென்ற முறையைப் போலவே இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.
காங்கிரஸ் 52 இடங்களில் வெற்றி பெறுவதற்கு தென்மாநிலங்களான கேரளாவும் தமிழ்நாடுதான் பெரிய அளவில் உதவி உள்ளன. குறிப்பாக கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒரு இடத்தில் மட்டுமே இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டார் மம்தா.. மே.வங்கத்தில் பாஜக வளர்ச்சி பற்றி காங். தாக்கு
வயநாட்டில் வெற்றி
காங்கிரஸ் கட்சி கேரளாவில் போட்டியிட்ட 16 இடங்களில் 15 இடங்களில் வெற்றி பெற்றது. வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட இடதுசாரி வேட்பாளரை விட சுமார் 4 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனால் ஒருபக்கம் அமேதியில் தோற்றாலும் கேரளாவில் வென்றது ராகுல் காந்திக்கு ஆறுதல் அளித்துள்ளது.
3 நாட்கள் கேரளாவில்
இதையடுத்து தன்னை லோக்சபா தேர்தலில் வெற்றி பெற வைத்த வயநாடு மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்க ராகுல் காந்தி முடிவு செய்தார். இதன்படி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 நாள்கள் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை கேரளா வந்தார். தன்னை வெற்றி பெற வைத்த வயநாடு தொகுதி மக்களை சந்தித்து கடந்த இரண்டு நாட்களாக நன்றி தெரிவித்தார்.
கைகுழுக்கிய ராகுல் காந்தி
மூன்றாவது நாளாக இன்றும் வயநாட்டில் மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அதன்பின்னர் கோழிக்கோடுக்கு வந்த ராகுல், திறந்தவெளி வாகனத்தில் சென்று காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகளும் திறந்த வெளி வாகனத்தில் சென்றனர். வீதி வீதியாக சென்ற ராகுல் காந்தி, பொதுமக்களிடம் கைகுழுக்கியும், கும்பிட்டும் நன்றி தெரிவித்தார்.
முத்தம் கொடுத்த நிர்வாகி
முன்னதாக கோழிக்கோடு வரும் முன்பாக வயநாடு அருகே சுல்தான் பத்தேரியில், தான் பிறந்த போது மருத்துமனையில் தூக்கிய ஓய்வு பெற்ற செவிலியர் ராஜம்மாவை கட்டியணைத்து ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார். கோழிக்கோடு நகரின் முக்கம் பகுதியில் இன்று பிற்பகல் நன்றி தெரிவித்து பேரணி சென்ற ராகுல் காந்தியை, காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் திடீரென வாகனத்தில் ஏறி கட்டியணைத்து முத்தம் கொடுத்தால் பரபரப்பு ஏற்பட்டது.