கோட்சேவை புகழ்வதா.. பிரக்யா சிங்கை உயிருடன் எரித்து விடுவேன்.. காங். எம்எல்ஏ காட்டம்
Recommended Video
போபால்: கோட்சேவை புகழ்ந்து பேசிய பிரக்யா சிங் தாகூர் எங்கள் தொகுதிக்கு வந்தால் உயிருடன் எரித்து விடுவோம் என காங்கிரஸ் எம்எல்ஏ கோவர்த்தன் டாங்கி தெரிவித்தார்.
மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாகூர், போபால் தொகுதியின் எம்பியாக இருக்கிறார். இவர் சிறப்பு பாதுகாப்பு குழு குறித்து விவாதத்தின் போது கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நாதுராம் கோட்சே தேசபக்தர் என புகழ்ந்தார். அவரது கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இதையடுத்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரக்யா சிங்கின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் பாதுகாப்பு அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற ஆலோசனை குழுவில் இருந்தும் நீக்கப்பட்டார்.
ஹேஷ்டேக்குகள்
கோட்சே குறித்து பிரக்யா சிங் பேசியது தொடர்பாக அவர் கட்சியிலிருந்து நீக்கப்படலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் பிரக்யா சிங்கை தீவிரவாதி என குறிப்பிட்டு ஹேஷ்டேக்குகள் சமூகவலைதளத்தில் டிரெண்டாகின.
மன்னிப்பு கோரிய பிரக்யா
இந்த நிலையில் கோட்சே குறித்து தாம் பேசியது தவறு என கூறி மக்களவையில் அவர் மன்னிப்பு கேட்டார். மேலும் தான் தெரிவித்த கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன் என நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் பிரக்யா.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் கோட்சேவை புகழ்ந்து பேசியதாக பாஜக பெண் எம்பி பிரக்யா சிங்கிற்கு கண்டனம் தெரிவித்து மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கார் மாவட்டம் பியோரா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ கோவர்த்தன் டாங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
காங்கிரஸ் கட்சி
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை புகழ்வது அருவருப்பான செயல். இப்போது பிரக்யா சிங்கின் உருவபொம்மையை எரித்துள்ளோம். அவர் என் தொகுதிக்கு வந்தால் உயிருடன் எரித்து விடுவோம் என்றார். அவரது மிரட்டல் பேச்சு சமூகவலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை உண்டாக்கியது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கூறுகையில் டாங்கியின் கருத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கூறியது.