கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி- 20 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி!
2006ஆம் ஆண்டுதான் சித்தராமையா காங்கிரஸில் இணைந்தார். அதற்கு முன்பு ஜனதா தளத்தில் இருந்தார். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து சித்தராமையா முதல்வராக்கப்பட்டார்.
ஆனால் சித்தராமையாவோ 'ஒரிஜினல்' காங்கிரஸ் கட்சியினருக்கு எந்த ஒரு பொறுப்பும் வழங்காமல் சித்தராமையாவுடன் கட்சியில் இணைந்த புதியவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது 20 எம்.எல்.ஏக்களின் புகார். இது தொடர்பாக சோனியாவுக்கும் கடிதம் ஒன்றையும் அவர்கள் கையெழுத்திட்டு அனுப்பி வைத்துள்ளனர்.
அத்துடன் எம்.எல்.ஏ. பைரதி பசவராஜ், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கெம்பையா உள்ளிட்ட சிலர்தான் காங்கிரஸ் அரசையே நடத்தி வருவதாகவும் அரசு ஊழியர்கள் இடமாறுதலுக்கு கோடிக்கணக்கான பணத்தை இவர்கள் லஞ்சமாக பெற்றுக் கொள்கின்றனர் என்றும் அந்தக் கடிதத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு வாரியங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமிப்பதில் சித்தராமையா எந்த ஒரு ஆர்வமும் காட்டவில்லை. அவரைப் பொறுத்தவரை தாம் முதல்வராக இருந்தால் மட்டும் போதும் எனக் கருதுகிறார் என நீள்கிறது அந்த புகார் பட்டியல்.
ஆனால் தம் மீதான புகார்களுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அவர்கள் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். ஊடகங்கள் இதுபற்றி எழுதுகின்றன. நான் சொல்வதற்கு எதுவும் இல்லையே என்று நழுவிக் கொண்டார் முதல்வர் சித்தராமையா.
இதனிடையே மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவர் குமாரசாமியோ, சித்தராமையாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.