ஒருவரின் மதத்தை பார்த்தா நாம் சினிமாவுக்கு செல்கிறோம்? மெர்சல் விவகாரத்தில் சசிதரூர் நறுக்!
பாஜக கடுமையாக எதிர்த்த மெர்சல் படத்திற்கு காங்கிரஸ் எம்பி சசிதரூர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்: மெர்சல் படத்திற்கு கேரள எம்பி சசிதரூர் ஆதரவு தெரிவித்துள்ளார். ஒருவரின் மதம் என்ன என்று பார்த்த பிறகா நாம் சினிமாவுக்கு செல்கிறோம்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் தீபாவளியன்று வெளியானது மெர்சல் திரைப்படம். இதில் மத்திய அரசின் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து விமர்சனம் செய்யப்பட்டது.
இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசை சாடும் வசனங்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.
அரசியல் கட்சிகள் ஆதரவு
இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் தரப்பு ஒப்புதல் தெரிவித்தது. பாஜகவின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
ரூ.170 கோடி வசூல்
மெர்சலுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்ததால் அப்படம் தேசிய அளவில் பேசப்பட்டது. இதனால் அப்படம் ரிலிஸான ஒரு வாரத்திலேயே 170 கோடி ரூபாய் வரை குவித்துள்ளது.
ஜனநாயக உரிமை
இந்நிலையில் மெர்சல் படத்துக்கு ஆதரவாக கேரள எம்பி சசிதரூர் பேசியுள்ளார். கேரள மாநில காங்கிரஸ் சார்பில் திருவனந்தபுரத்தில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் எம்பியுமான சசிதரூர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் சமூக, அரசியல் கருத்துகளுடன் சினிமா எடுப்பது ஜனநாயக உரிமை என்றார்.
பாஜக மிரட்டுகிறது
படம் தணிக்கை செய்யப்பட்ட பிறகு, அதை எதிர்க்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் சசிதரூர் கூறினார். ஆனால், ‘மெர்சல்‘ படத் தயாரிப்பாளர்களை பாஜக மிரட்டுகிறது. இது ஏற்புடையதல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
வசனங்களை நீக்க தேவையில்லை
ஜி.எஸ்.டி. தொடர்பான வசனம் சரியானதுதான். ஜி.எஸ்.டி.யை பொதுமக்களும், வணிகர்களும் எதிர்ப்பதால், அதை வசனமாக வைப்பதில் தவறு இல்லை என்றும் அந்த வசனங்களை நீக்க தேவையில்லை என்றும் சசிதரூர் கூறினார்.
மதத்தை பார்த்தா?
இப்பிரச்சினையில், நடிகர் விஜயின் மதத்தை பற்றி பா.ஜனதா பேசுகிறது. ஒருவரின் மதம் என்ன என்று பார்த்த பிறகா, நாம் சினிமாவுக்கு செல்கிறோம்? என்றும் காங்கிரஸ் எம்பி சசிதரூர் கேள்வி எழுப்பினார்.