இறுதி கட்டத்தை நெருங்குகிறது மகாராஷ்டிரா அரசியல் குழப்பம்- மும்பையில் நாளை பரபர ஆலோசனைகள்!
Recommended Video
டெல்லி: மகாராஷ்டிரா அரசியலில் ஒரு மாத காலமாக நீடித்து வரும் அரசியல் குழப்பம் முடிவுக்கு வரும் நிலையை நெருங்கியுள்ளது. புதிய அரசு அமைப்பது தொடர்பான என்சிபி, காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனை நிறைவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் எந்த ஒரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியாமல் போனதால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஆனால் என்சிபி, காங்கிரஸ், சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்க முயற்சிகளை மேற்கொண்டன.
இதில் அவசரம் காட்டாமல் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஒவ்வொரு கட்டமாக மூன்று கட்சிகளும் ஆலோசனை நடத்தின. இம்மூன்று கட்சிகளும் இணைந்து செயல்படுவதற்கான குறைந்தபட்ச பொதுசெயல் திட்ட அறிக்கையும் உருவாக்கப்பட்டது.
டெல்லி ஆலோசனை
இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா அரசியல் விவகாரம் டெல்லியில் மையம் கொண்டிருந்தது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை என்சிபி தலைவர் சரத்பவார் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
முதல்வர் பதவி யாருக்கு?
பின்னர் சரத்பவாரின் டெல்லி இல்லத்தில் அடுத்தடுத்து காங்கிரஸ், என்சிபி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். முதல்வர் பதவி தொடர்பாக குழப்பங்கள் இருந்த போதும் தற்போதைய நிலையில் இந்த ஆலோசனைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
ஆலோசனைகள் நிறைவு
டெல்லியில் இன்றைய ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் பிரித்விராஜ் சவாண், என்சிபியுடனான ஆலோசனைகள் முடிவடைந்துவிட்டன. மும்பை சென்று கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம்.
நாளை எம்.எல்.ஏக்கள் கூட்டம்
அதன்பின்னர் சிவசேனாவுடன் ஆலோசனை நடத்துவோம் என்றார். இதனிடையே மும்பையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை கூடுகிறது. இதில் மகாராஷ்டிரா சட்டசபை காங்கிரஸ் குழுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
குழப்பங்களுக்கு தீர்வு
இந்நிலையில் அடுத்த ஓரிரு நாட்களில் மகாராஷ்டிராவில் புதிய அரசு அமையும் என்கிற நம்பிக்கையை சிவசேனா தெரிவித்துள்ளது. இதனால் ஒரு மாத அரசியல் குழப்பம் முடிவுக்கு வர உள்ளது.