கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன?
வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எத்தகைய கூட்டணி முடிவுகளை காங்கிரஸ் கையாள வேண்டும் என்று கர்நாடகத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளது.
பெங்களூரு : கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகளின் மூலம், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகத் தேர்தல் முடிவுகள் மூலம், அடுத்த ஆண்டு வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து மாநிலங்களிலும் பாஜகவை எதிர்ப்பதற்கான கூட்டணி உருவாவதற்காக பேச்சுவார்த்தைகளைத் துவக்கி வைத்துள்ளது.
காங்கிரஸ் தனித்தோடு அல்லது சிறு கட்சிகளோடு கூட்டணி வைத்தோ பாஜகவை எதிர்க்க முடியாது என்பது தெளிவாகியுள்ளது. அதே நேரம் மூன்றாவது அணி உருவாவதும் பாஜகவின் வெற்றிக்கே வித்திடும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதவாதசக்திகளுக்கு எதிரான கூட்டணி
மேலும், பாஜகவின் தொடர் வெற்றிகளைத் தடுக்க, பாஜக மற்றும் மதவாத சக்திகளை எதிர்க்கும் கூட்டணியை தேசிய அளவில் காங்கிரஸ் உருவாக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு புறமும், அவர்களை எதிர்க்கும் கட்சிகள் ஒரு அணியில் இருந்து இரு முனை போட்டி இருந்தால் மட்டுமே, பாஜகவின் வெற்றியை கவர முடியும். மும்முனைப் போட்டிகள் கூட பாஜகவிற்கே சாதகமாக அமையும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பாஜகவின் செல்வாக்கு
2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸிற்கு எதிராக பாஜக மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணி உருவாக்கியதன் மூலம், பெரும்பான்மை வெற்றி பெற்றது. அதே போல ஒரு கூட்டணியை காங்கிரஸ் பாஜகவிற்கு எதிராக உருவாக்கினாலும், கடந்த சில ஆண்டுகளில் ராஜஸ்தான், இமாச்சல் பிரதேசம், உத்தர்கண்ட், டெல்லி, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், உத்தர பிரதேசம் என பல மாநிலங்களிலும் பாஜகவிற்கான செல்வாக்கு அதிகரித்து இருப்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
வலுவான கூட்டணி வேண்டும்
குஜராத்தில் 13%, ராஜஸ்தானில் 15%, மத்திய பிரதேசத்தில் 20% ஓட்டுகள் பாஜகவை விட கடந்த தேர்தல்களில் குறைவாகப் பெற்றுள்ளது. பாஜக பெரும்பான்மை பெற்றுள்ள மாநிலங்களில், மாநிலக்கட்சிகளோடு கூட்டணி வைப்பதன் மூலம் பாஜகவின் வெற்றியை பாதிக்க முடியும். உதாரணமாக, உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளோடு காங்கிரஸ் கூட்டணி வைப்பதன் மூலம் பாஜகவிற்கு கடும் போட்டியை ஏற்படுத்த முடியும்.
பாஜக எதிர்ப்புக் கூட்டணி
மேற்கு வங்கம் மற்றும் ஒரிசா மாநிலங்களிலும் பாஜக குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைப் பெற்றுள்ளது. அங்கு பலம் வாய்ந்த கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. திரிணாமூல் காங்கிரஸோடு கூட்டணி வைப்பதன் மூலம், காங்கிரஸ் அங்கு பாஜகவின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட முடியும். அதேபோல, ஆந்திராவிலும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் அல்லது தெலுங்கு தேசம் கட்சியோடு கூட்டணி வைத்தால் அது பாஜகவிற்கு எதிராக அமையும். ஆனால், இது போன்ற பாஜக எதிர்ப்புக் கூட்டணி அமைவதற்கு கட்சித் தலைவர்கள் தங்களுக்குள்ளான மோதல்களைக் கடந்து வர வேண்டும். அப்போது தான் இந்தியா முழுக்க பாஜகவை எதிர்ப்பதற்கான வலுவான அடித்தளம் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.