பூஜ்யத்தோடு போராட்டம்.. வடகிழக்கில் மொத்தமாக காலியான காங்கிரஸ்!
Recommended Video
டெல்லி: ஒரு காலத்தில்.. என்று கூட சொல்ல வேண்டாம், ஜஸ்ட் 2014ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அகலும்போது உள்ள சூழ்நிலை என்ன தெரியுமா? வடகிழக்கின், 5 மாநிலங்களில் அக்கட்சி ஆட்சிதான் இருந்தது. ஆனால் இன்று?
2014ல் அசாம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், மிசோராம் மற்றும் மேகாலயா ஆகிய 5 மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரசுக்கு இப்போது எஞ்சியுள்ளது ஒரு மாநிலம்தான்.
ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு இது அக்கட்சிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அடி.
மிசோராம் மட்டுமே மிச்சம்
மிசோராமில் மட்டும் இப்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்திற்கும் இவ்வாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. மேகாலயாவில் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு கைக்கு கிடைத்தும் வாய்க்கு எட்டாத நிலை. மற்றொரு கோவா போல காங்கிரஸ் சிக்கிக்கொண்டது. வடகிழக்கில் காங்கிரஸ் ஆதிக்கம் கொடி கட்டி பறந்த காலம் போய் இப்போது ஒரு சீட் கிடைக்குமா என்ற நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.
ஒரு தொகுதியும் கிடைக்கவில்லை
உதாரணத்திற்கு, நாகாலாந்து மற்றும் திரிபுராவில் காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை. இதன் மூலம் நாடு முழுக்க, ஒட்டு மொத்தமாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை 3ஆக குறைந்துள்ளது. மிசோராம் தவிர, கர்நாடகாவிலும், பஞ்சாப்பிலும் மட்டும்தான் அக்கட்சி ஆட்சி உள்ளது.
காங்கிரஸ் இல்லாத இந்தியா
கர்நாடகாவிலும் பாஜக ஆதிக்கம் ஒருவேளை தொடர்ந்தால், மோடி கடந்த லோக்சபா தேர்தலில் அழைப்புவிடுத்ததை போல, 'காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்ற நிலைக்கு அச்சாரம் போடப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை. இதற்கு பாஜகவைவிட காங்கிரஸ்தான் முக்கிய காரணமாக இருக்கும்.
காங்கிரஸ் தலைவர்கள்
கர்நாடகாவில் சித்தராமையா, பஞ்சாப்பில் கேப்டன் அம்ரிந்தர் சிங் போல வலிமையான பிராந்திய தலைவர்களை காங்கிரஸ் உருவாக்காமல் உள்ளதுதான் இந்த பின்னடைவுகளுக்கு பெரும் காரணம். ஆனால், அதுகுறித்து எந்த நடவடிக்கையையும் எடுத்து கட்சியை முன்னேற்றுவதற்கான வழியை இன்னும் ராகுல்காந்தி தேடவில்லை. பாஜகவின் தவறுகள் மட்டுமே தங்களுக்கு வாக்குகளை பெற்றுத்தந்துவிடும் என்று காங்கிரஸ் அசட்டு தைரியத்தில் இருப்பதே வடகிழக்கையும் அக்கட்சி இழக்க காரணம்.