டீல் மச்சி டீல்... சுஷ்மா, வசுந்தர ராஜேவை கழற்றிவிட்டால் 'ஜி.எஸ்.டி.' மசோதாவுக்கு காங். ஆதரவு?
டெல்லி: தேடப்படும் குற்றவாளி லலித் மோடி விவகாரத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே ஆகியோர் ராஜினாமா செய்தால் நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு சேவை வரி மசோதாவுக்கு ஆதரவளிப்போம் என காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது விஷமத்தனமான தகவல்; மத்திய அரசுடன் எந்த ஒரு சமரசமும் இல்லை என்கிறது காங்கிரஸ்.
ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடிக்கு உதவி செய்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறற அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவையும் பதவியில் இருந்து பிரதமர் மோடி நீக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கோரிக்கை.
அப்படி சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜேவை ராஜினாமா செய்ய செய்தால் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு சேவை வரி மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஆதரவு அளிப்பதாக மத்திய அரசிடம் காங்கிரஸ் நிபந்தனை விதித்ததாக கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் இந்த நிபந்தனையை மத்திய அரசு நிராகரித்தது என்றும் கூறப்பட்டது.
அதே நேரத்தில் ஒட்டுமொத்த இத்தகைய தகவல்களை நிராகரித்து உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இவை அனைத்தும் முற்றிலும் அடிப்படையற்றது மற்றும் விஷமத்தனமானது என்று கொந்தளித்துள்ளார்.
மேலும் மத்திய அரசுடன் எந்த ஒரு சமரசத்துக்குமே இடமில்லை என்றும் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.