தக்காளி வங்கி... நோ ஜிஎஸ்டி - உ.பி காங்கிரஸ் அட்டாக்
தக்காளி விலை உயர்வை கண்டு கொள்ளாத உத்தரபிரதேச பாஜக அரசை கண்டிக்கும் வகையில் பாஜக தக்காளி வங்கியை துவங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி.
லக்னோ: மக்களை சட்டினியாக்கி வருகிறது தக்காளி. தக்காளி பெயரை கேட்டாலே தெரித்து ஓடும் அளவிற்கு விலை உயர்ந்துள்ளது. இதனைக் கண்டித்து லக்னோவில் காங்கிரஸ் கட்சி சார்பில் தக்காளி வங்கி தொடங்கி போராடி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் ஸ்டேட் பாங்க் ஆஃப் டொமேட்டோ என்ற வங்கியை காங்கிரஸ் கட்சியினர் தொடங்கியுள்ளனர்.
இந்த வங்கியில் அரை கிலோ தக்காளியை ஒருவர் முதலீடு செய்து, ஆறு மாதத்திற்கு பிறகு வட்டியுடன் ஒரு கிலோ தக்காளிகளை பெற்றுக்கொள்லாம்.
தக்காளி விலை உயர்வு
தமிழ்நாட்டில் தக்காளி ஒருகிலோ 120 ரூபாய் வரை விற்பனையானது. வட மாநிலங்களில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. நாடுமுழுவதும் தக்காளியின் திடீர் விலை உயர்வு நடுத்தர மக்களையும், ஏழை மக்களையும் பாதித்துள்ளது.
தக்காளி வங்கி
தக்காளி விலை உயர்வை கண்டிக்கும் வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் காங்கிரஸ் கட்சியினர் தக்காளி வங்கியை தொடங்கி, நூதன போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தக்காளி டெபாசிட்
இந்த வங்கியில் மக்கள் தங்களிடம் உள்ள தக்காளியை முதலீடு செய்து வைக்கலாம் என்றும் அவர்களுக்கு தேவைப்படும்போது கூடுதல் தக்காளிகள் வட்டியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஜிஎஸ்டி கிடையாது
முதலீடு செய்யும் தக்காளிகளுக்கு பல சலுகைகள் உண்டு என்றும், குறிப்பாக ஜிஎஸ்டி கிடையாது என்றும் அறிவித்துள்ளனர். மக்கள் பலரும் இந்த வங்கியில் தக்காளியை டெபாசிட் செய்து வருகின்றனர்.
அப்போ வெங்காயம் இப்போ தக்காளி
மத்தியிலும், பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்ற போது வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. அப்போது எதிர்கட்சியாக இருந்த பாஜகவினர் வெங்காயத்தை கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு போராடினர். இப்போது காங்கிரஸ் கட்சியினர் தக்காளி வங்கி தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.