சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு ரத்து- கெஜ்ரிவால்-காங் மோதல்
டெல்லி: டெல்லியில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முந்தைய காங்கிரஸ் அரசின் உத்தரவை ஆம் ஆத்மி அரசு திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. ஆனால் இது பொறுப்பற்ற முடிவு என மத்திய அமைச்சர் ஆனந்த சர்மா சாடியுள்ளார்..
டெல்லியில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை அமல்படுத்துவதற்கு முந்தைய காங்கிரஸ் அரசில் வழங்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது.
ஆம் ஆத்மியின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா ,கொள்கை முடிவுகளை அடிக்கடி மாற்றிக் கொள்வதற்கு இந்தியா ஒன்றும் வளர்ச்சியடையாத நாடு அல்ல. ஆம் ஆத்மியின் முடிவு பொறுப்பற்றத் தன்மையை உணர்த்துகிறது.
மைனாரிட்டி அரசான ஆம் ஆத்மி அவசர கதியில் இந்த முடிவை எடுத்துள்ளது. இது போன்ற முடிவுகளை நிலையான ஆட்சி செலுத்தும் எந்த அரசும் எடுக்காது என்றார்.