மத்திய பாஜக அரசைக் கண்டித்து நாடு முழுவதும் காங். உண்ணாவிரதப் போராட்டம்!
மத்திய பாஜக அரசைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லி : மத்திய பாஜக அரசைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் இரு அவைகளிலும் எம்.பி.,க்களின் தொடர் அமளி காரணமாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் அவை நேரம் வீணடிக்கப்பட்டது. சிபிஎஸ்இ கேள்வித்தாள் வெளியான விவகாரம், பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு, காவிரி விவகாரம், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது உள்ளிட்ட பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் முறையாக விவாதிக்க மத்திய அரசு தவறிவிட்டது என்பது காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு.
நாடாளுமன்றத் தேர்தலின் போது கொடுத்த எந்த வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றவில்லை என்றும் காங்கிரஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சிறுபான்மை மக்களை அச்சப்படுத்தும் விதமான நடவடிக்கைகள் நாடுமுழுவதும் பாஜகவால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதும் காங்கிரஸின் குற்றச்சாட்டு.
மத்திய அரசின் இந்த போக்கைக் கண்டித்து இன்று காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லி ராஜ்கோட்டில் நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார்,
மேலும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் வரும் 29ம் தேதி ராம்லீலா மைதானத்தில் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதனிடையே எதிர்க்கட்சிகளைக் கண்டித்து வரும் 12-ந் தேதி நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று பாஜக அறிவித்துள்ளது. இதில் பிரதமர் மோடியும் பங்கேற்கிறார்.