டெல்லியில் ஈவிகேஎஸ், தங்கபாலு, ப.சிதம்பரம், ஜெயந்தி.. சோனியாவுடன் அவசர சந்திப்பு
டெல்லி: காங்கிரசிலிருந்து பிரிந்துள்ள வாசனின் புதிய கட்சியை பலவீனப்படுத்தவும், காங்கிரஸின் பலத்தை நிரூபிப்பதற்காகவும் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். இந்நிலையில் சோனியாவின் அவசர அழைப்பின் காரணமாக தமிழக காங்கிரஸார் டெல்லிக்கு விரைந்தனர். அவர்கள் சோனியாவை இன்று மாலை சந்தித்துப் பேசி ஆலோசனை நடத்தினர்.
மேலிடத் தலைவர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக காங்கிரஸிலிருந்து விலகியுள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே வாசன் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
அவருக்கு எஸ்.ஆர் பாலசுப்பிரமணியன், ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், ஞானசேகரன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளர்.
30க்கும் அதிகமான தலைவர்கள்:
9 முன்னாள் எம்.பிக்கள், 30க்கும் அதிகமான முன்னாள் எம்.எல்.ஏக்கள், 20க்கும் அதிகமான மாவட்டத் தலைவர்களும் வாசன் பக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
வாசன் ஆதரவாளர்கள் முயற்சி:
மேலும், பலரையும் தங்கள் பக்கம் கொண்டுவர வாசன் ஆதரவாளர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கட்சியைப் பலவீனப் படுத்த திட்டம்:
இந்நிலையில், வாசனின் புதிய கட்சியைப் பலவீனப்படுத்த வேண்டும் என்பதில் காங்கிரஸ் மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது. முன்னாள் எம்.பியான ஜே.எம். ஆருண், கடைசி வரை வாசனுடனேயே இருந்தார்.
மனம் மாறிய ஆருண்:
ஆனால், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் அவருடன் பேசியதால் மனம் மாறி கடைசி நேரத்தில் காங்கிரஸிலேயே இருந்துவிட்டார். வாசன் கட்சிக்கு செல்ல வேண்டாம் என அகமது படேல் தன்னிடம் கேட்டுக் கொண்டதை ஆருண் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.
கைவிட்ட தீவிர ஆதரவாளர்:
ஜி.கே. வாசனின் தீவிர ஆதரவாளரான சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் மேலிடத் தலைவர்கள் நேரடியாகப் பேசியதால் கடைசி நேரத்தில் வாசன் கட்சிக்குச் செல்வதை தவிர்த்துவிட்டார்.
இளங்கோவனுக்கு உத்தரவு:
காங்கிரஸ் பலமாக இருப்பதை உறுதி செய்யவும், வாசனின் புதிய கட்சியை பலவீனப்படுத்தவும், பிரபலமானவர்களைக் கட்சியில் சேர்க்கவும், காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்குமாறு இளங்கோவனை மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இணைந்த புதியவர்கள்:
அதைத் தொடர்ந்து,கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் பாமகவுக்கு சென்ற சிதம்பரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மணிரத்தினம், என்.ஜி.ஓ சங்க முன்னாள் தலைவர் சூரியமூர்த்தி உள்ளிட்டோர் காங்கிரஸில் புதன்கிழமை இணைந்தனர்.
பீட்டர் அல்போன்ஸ் ஆதரவு வாசனுக்கு:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், வாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ்க்கு சுதந்திரம்:
ஆனால், கேரள காங்கிரஸ்க்கு வழங்கப்பட்டுள்ளது போல தமிழக காங்கிரஸக்கும் சுதந்திரம் வழங்க வேண்டும் என ப. சிதம்பத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் தலைவர்கள்:
இந்நிலையில் சோனியா காந்தியின் அவசர அழைப்பை ஏற்று இளங்கோவன், தங்கபாலு, ஜெயந்தி நடராஜன் டெல்லி விரைந்தனர். இன்று மாலை அவர்கள் சோனியாவைச் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், குமரி அனந்தன், எச். வசந்தகுமார் ஆகியோரும் உடன் இருந்தனர்.