ராஜஸ்தானில் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையே மோதல்... உட்கட்சி பூசல்
ஜெய்ப்பூர்: ஜோத்பூரில் தனது மகன் வைபவ் கெலாட் தோல்விக்கு துணை முதலமைச்சர் சச்சின் பைலட் பொறுப்பேற்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளிலும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்றது. மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் பரிதாப தோல்வி அடைந்துள்ளது.
ராஜஸ்தான் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட். ஜோத்பூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இவரை பாஜ வேட்பாளர் கஜேந்திர சிங் ஷெகாவத், 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதே போல், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை பாஜக வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தனர்.
ஜோத்பூர் தொகுதி பல ஆண்டுகளாக முதலமைச்சர் அசோக் கெலாட்டின் கோட்டையாக உள்ளது. அவர் ஜோத்பூர் மக்களவை தொகுதியில் இருந்து ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தில் ஆட்சியமைத்த 6 மாதத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் பெரும் சறுக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து, ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சர் பதவியிலிருந்தும், காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலக சச்சின் பைலட் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
மேலும், அவருடன் எம்.எல்.ஏ.க்கள் சிலரும் விலகி, ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள முடிவு செய்திருந்ததாக கூறப்பட்டது. சில சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பாஜக எல்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் சச்சின் பைலட் முதலமைச்சராக பதவியேற்க திட்டமிட்டிருந்ததாகவும் அக்கட்சியின் வட்டார தகவல்கள் தெரிவித்தன.
சமாஜ்வாதியுடனான கூட்டணி முறிவு தற்காலிமானாதே... மாயாவதி தடாலடி
இந்தநிலையில், முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் நேரடியாக மோதல் வெடித்துள்ளது. இதனால், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டிக்குள் பிளவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.