நேரு பிறந்த நாள் விழாவுக்கு பிரதமர் மோடியை காங். கட்டாயம் அழைக்க வேண்டும்: இன்ஸ்டவானி 'சர்வே'
டெல்லி: காங்கிரஸ் கட்சி மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடும் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியை கட்டாயம் அழைக்க வேண்டும் என்று பொதுமக்களில் பலரும் கருத்து தெரிவித்திருப்பதாக இன்ஸ்டவானி நிறுவனம் நடத்திய 'சர்வே'யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் வரும் 17,18 தேதிகளில் டெல்லியில் நேரு பிறந்த நாள் விழா நடைபெறுகிறது. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். ஆனால் பிரதமர் மோடிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.
நேரு பிறந்தநாள் விழா தொடர்பான மத்திய அரசு கமிட்டியில் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறாததாலேயே பிரதமர் மோடியை காங்கிரஸ் அழைக்கவில்லை. இந்த நிலையில் இன்ஸ்டவானி நிறுவனமானது ஒரு சர்வே மேற்கொண்டது.
தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கடந்த 14-ந் தேதி 101 பேரிடம் இக்கருத்து கணிப்பை நடத்தியது.
"நேரு பிறந்த நாள் விழாவுக்கு பிரதமர் மோடியை காங்கிரஸ் அழைக்க தேவையில்லையா? என்பதுதான் கேள்வி.
இதற்கு பிரதமர் மோடியை கட்டாயம் அழைக்க வேண்டும் என்று 61% பேர் கூறியுள்ளனர்.
பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்டாயம் அழைக்க கூடாது என்று 16% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் எந்த கருத்தும் இல்லை என்று 23% பேர் கூறியுள்ளனர். பெரும்பான்மையினராக பிரதமர் மோடியை கட்டாயம் அழைக்க வேண்டும் என்றே கருத்து தெரிவித்திருக்கின்றனர்.