பாஜக கட்சி பொய்களால் கட்டமைக்கப்பட்டது.. காங். செயற்குழுவுக்கு பின் ராகுல் பேச்சு
காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்ற நிலையில் அவர் தலைமையில் இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் முதன்முறையாக கூடுகிறது.
டெல்லி : காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றதையடுத்து முதன்முறையாக டெல்லியில் இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. குஜராத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றது, 2ஜி அலைக்கற்றை வழக்கில் வெளிவந்த தீர்ப்பை மக்களிடம் கொண்டு செல்வது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி கடந்த டிசம்பர் 16ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து டிசம்பர் 18ல் வெளியான குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சியில் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தோல்வியை சந்தித்து ஆட்சியை பாஜகவிடம் பறி கொடுத்துள்ளது. எனினும் குஜராத்தில் 32 ஆண்டுகளில் இல்லாத வகையில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ராகுல்காந்தியின் பிரச்சாரமும், இளம் தலைவர்களை களத்தில் இறக்கி ஓட்டுகளை பிரித்ததுமே பாஜகவின் பின்னடைவிற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்றதையடுத்து அவர் தலைமையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் 2ஜி வழக்கின் தீர்ப்பை மக்கள் மத்தியில் கொண்டு சென்று எப்படி காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை பலப்படுத்துவது என்று விவாதிக்கப்பட்டது. காரிய கமிட்டி கூட்டம் முடிந்து வந்த ராகுல் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார்.
அதில் ''2 ஜி வழக்கு பற்றிய உண்மை வெளியே வந்துவிட்டது. அந்த வழக்கு குறித்து எல்லோருக்கும் தெரியும்.'' என்றார். மேலும் பாஜக குறித்து பேசும் போதும் ''பாஜக கட்சி முழுக்க முழுக்க பொய்களால் கட்டமைக்கப்பட்ட கட்சி. எல்லோரும் 2ஜி வழக்கு பற்றி கேட்டார்கள். ஆனால் யாரும் மோடியின் 15 லட்சம் ரூபாய் வாக்குறுதிகள் குறித்து யாரும் பேசவில்லை. குஜராத் மாடல் குறித்தும் யாரும் பேசவில்லை'' என்று குறிப்பிட்டார்.