எதிர்ப்பால் தனியார் துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு முழக்கத்தை கைவிட்ட காங்கிரஸ்!
டெல்லி: தாழ்த்தப்பட்டோருக்கு தனியார் துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனும் உறுதிமொழி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறுவதற்கு வட இந்திய ஊடகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அது கைவிடப்பட்டுவிட்டது.கைவிட்டுவிட்டது.
லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் தனியார் துறை வேலைவாய்ப்பில் தலித்களுக்கு இடதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்வோம் என்ற வாக்குறுதிதான் பிரதான இடம்பெறும்.. அப்படி ஒரு வாக்குறுதி இடம்பெற்றுவிடக் கூடாது என்று நேற்று முதலே தீவிர எதிர்ப்பு பிரசாரம் மெற்கொள்ளப்பட்டு வந்தது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்த வாக்குறுதி இடம்பெற வேண்டும் என்பதில் முனைப்போடு இருந்தவராக அக்கட்சியின் தாழ்த்தப்பட்டோர் பிரிவு தலைவரும் ராகுலின் தளகர்த்தருமான கே. ராஜூதான் சுட்டிக்காடப்படுகிறார். இதேபோல் பெங்களூர் தெற்கு தொகுதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள நந்தன் நிலகேணியும் இந்த வாக்குறுதி இடம்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாராம்.
லோக்சபா தேர்தலில் பெரும் பின்னடைவை எதிர்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 'தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு தனியார் துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு" என்ற முழக்கம் கை கொடுக்கும் என்றே நம்பப்பட்டது. ஆனால் இடஒதுக்கீடு என்றாலே அலறுகிற வட இந்திய ஊடகங்கள் சும்மா இருந்துவிடுமா என்ன?
அரசுப் பணிகளில் சமூக நீதியை நிலைநாட்டவே இடஒதுக்கீடு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த சமூக நீதி முழக்கத்தின் தாயகமாக தமிழகம் அன்றும் இன்றும் விளங்கி வருகிறது.
மண்டல் கமிஷன்
இதன் ஒரு கட்டமாகவே மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மண்டல் கமிஷன் அறிக்கையை அந்நாளைய வி.பி.சிங் அரசு அமல்படுத்த முனைந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பை கிளப்பிவிட்டு நாட்டை வன்முறைக் காடாக்கின சில ஊடகங்கள்.
அதன் பின்னர் "இடஒதுக்கீடு" என்ற வார்த்தையை கேட்டாலே இந்த ஊடகங்களுக்கு காதில் ஈயத்தைக் காற்றி ஊச்சுவதைப் போன்ற உணர்வு தான்.
திமுக தேர்தல் அறிக்கை
தற்போதைய லோக்சபா தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் தனியார் துறை வேலைவாய்ப்பில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்வோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை தமிழகத்தில் பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிற ஒரு கோரிக்கை.
முதல் கட்டமாக தாழ்த்தப்பட்டோருக்கு...
இக்கோரிக்கையை காங்கிரஸும் ஏற்றுக் கொண்டு முதல் கட்டமாக தமது தேர்தல் அறிக்கையில் தாழ்த்தப்பட்டோர் மற்ரும் பழங்குடியினருக்கு தனியார்துறை வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டுக்கான உறுதி மொழி அளிக்க இருக்கிறது என்று தகவல்தான் பரவியது.
அலறும் ஊடகங்கள்.. விட்டுவிடுவார்களா...
அப்படி ஒரு தகவல் வெளியாகிய நிலையில் அதுவும் அதிகாரப்பூர்வமாக தேர்தல் அறிக்கையே வெளியாகாத நிலையில் வட இந்திய ஊடகங்கள் அலறி அடித்துக் கொண்டு அதெப்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனியார் துறையில் இடஒதுக்கீடு தரலாம்? தகுதி- திறமைதானே எல்லாவற்றையும் தீர்மானிக்க வேண்டும் என்று வழக்கமான சொத்தை வாதங்களை முன் வைத்தனர்...
அனல் பறக்க வைக்கும் விவாதங்கள்...
அனைத்து தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு என்ற சொல்லைக் கேட்டவுடனே டைம்ஸ் நவ் அர்னாப் கோஸ்வாமி வகையறாக்களுக்கு தேள் கொட்டினாற் போல அல்ல முதலையே கடித்துவிட்டது போல முக்கி முனகி விவாதங்களை நேற்று முதலே நடத்தி சூடு பறக்க வைத்துக் கொண்டிருந்தனர்.. இன்று அவர்களது ஆவல் நிறைவேறியது போல.. அவர்களது அலறலுக்கு பயந்து காங்கிரஸ் கட்சியும் தனியார்துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்ற முழக்கத்தையே கைவிட்டுவிட்டது.
பல்டியடித்த காங்கிரஸ்
மாறாக "பொருளாதாரத்தில் பின் தங்கிய அனைத்து பிரிவினருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு" வழங்க நடவடிக்கை என்கிறது. அதே நேரத்தில் எஸ்.சி. எஸ்.டி, ஓ.பி.சியினரின் தற்போதைய இடஒதுக்கீடு பாதிக்காமல் அதை நடைமுறைப்படுத்துவோம் என்று குழப்பவாத நிலையை தேர்தல் அறிக்கையில் சொருகி வைத்திருக்கிறது காங்கிரஸ்..