டெல்லி: பாஜக முதல்வர் வேட்பாளர் ஹர்ஷவர்தன் மீதுகூடத்தான் பலாத்கார புகார் வந்தது: காங்.
டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் பலாத்கார விவகாரங்கள் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. தேர்தல் பிரசாரத்தின் போது டெல்லியில் ஆளும் காங்கிரஸ் அரசால் பலாத்கார சம்பவங்களை தடுக்க முடியவில்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளரான டாக்டர் ஹர்ஷவர்தன் சாடியிருந்தார்.
இதற்கு பதில் கொடுக்கும் வகையில் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், அமைச்சர்கள் ஹாரூன் யூசும் ராஜ்குமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, காங்கிரஸ் அரசு மீது புகார் கூறும் ஹர்ஷவர்தன் அவரது வீட்டு வேலைக்கார பெண்ணை பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. அவர் அமைச்சராக இருந்த 1998ஆம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கே பாதுகாக்க முடியாதவர் ஹர்ஷவர்தன். அவரால் ஒட்டுமொத்த டெல்லி பெண்களுக்கும் எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர்.
ஆனால் ஹர்ஷவர்தன் இதனை மறுத்துள்ளார். தம் மீதான புகாருக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.. காங்கிரஸ் கட்சியினர் விரக்தியில் பேசுகின்றனர் என்றார்.
1996ஆம் ஆண்டு ஹர்ஷவர்தன் மீது அவரது வீட்டு வேலைக்கார பெண் பலாத்கார புகார் தெரிவித்திருந்தார். இதை ஹர்ஷவர்தன் மறுத்ததுடன் மரபணு சோதனைக்கும் தயார் என அறிவித்தார். அதன்படி மரபணு சோதனை நடத்தப்பட்டது.. பின்னர் ஹர்ஷதவர்தனுக்கு எதிரான புகாருக்கு ஆதராரமில்லை என்று போலீஸ் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.