திரிபுராவிலும் இடதுசாரிகள் ‘தற்கொலை’யால் மரணத்தில் இருந்து மீண்டு எழுந்த காங்.
அகர்தலா: மேற்கு வங்கத்தைப் போல திரிபுராவிலும் பாஜகவுக்கு இடதுசாரிகள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். அதே நேரத்தில் கட்சியையே பாஜகவிடம் பறிகொடுத்த காங்கிரஸ் இப்போது நம்பிக்கையுடன் திரிபுராவில் மீண்டு எழத் தொடங்கியுள்ளது.
2018 சட்டசபை தேர்தலில் கால் நூற்றாண்டு காலம் ஆட்சி செலுத்திய இடதுசாரிகளை திரிபுராவில் முடிவுக்கு கொண்டு வந்தது பாஜக. 2013 சட்டசபை தேர்தலில் 1.54% பெற்றிருந்த பாஜக, கடந்த ஆண்டு தேர்தலில் 43% வாக்குகளைப் பெற்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.
இதற்கு காரணம் திரிபுராவில் காங்கிரஸ் கட்சியை அப்படியே தம்முடைய கட்சியாக வளைத்துப் போட்டது பாஜக. இதனால் அம்மாநிலத்தின் காங்கிரஸின் வாக்கு வங்கி பெருமளவு பாஜகவுக்கு போனது. இதனால் இடதுசாரிகள் வீழ்ச்சியை பறிகொடுக்க நேர்ந்தது.
அறிவாலயத்தில் புது உதயம்.. விரைவில்.. இளைஞர் அணி தலைவராகிறார்.. "இளைய தளபதி"!
இடதுசாரிகள் முடிவு
இந்நிலையில் லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜகவுடன் இடதுசாரிகள் கை கோர்த்துக் கொண்டு மமதா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தினர். இதனால் பாஜக 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திரிபுராவிலும் இடதுசாரிகள் இதே பாணியை எஞ்சிய காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடைபிடித்தனர். இதில் பாஜக மட்டும் ஆதாயம் அடையவில்லை. சவக்குழிக்கு போனதாக கருதப்பட்ட காங்கிரஸும் கூட மீண்டும் எழுந்து வந்திருக்கிறது.
மரணித்த காங்கிரஸ்
அதாவது 2013-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 36.3% வாக்குகளுடன் 48 இடங்களில் வென்றது காங்கிரஸ். 2018 சட்டசபை தேர்தலில் வெறும் 1.8% வாக்கு சதவீதம் என பரிதாப நிலைக்கு போய் இனி சமாதிதான் என்கிற சூனியத்துக்குள் தள்ளப்பட்டது காங்கிரஸ்.
காங். வாக்கு சதவீதம் அதிகரிப்பு
தற்போதைய லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் திரிபுராவில் வெல்லவில்லை. ஆனால் அதனுடைய வாக்கு சதவீதம் எவ்வளவு தெரியுமா? கிழக்கு திரிபுரா லோக்சபா தொகுதியில் 26.58%; மேற்கு திரிபுரா தொகுதியில் 24.18% என மிரட்டிக் கொண்டு எழுந்து நிற்கிறது. பாஜகவுக்கு பிரதான போட்டியாளர் என்கிற நிலையில் காங்கிரஸ் நிமிர்ந்து நிற்கிறது.
இடதுசாரிகள் பரிதாபம்
திரிபுராவின் 2 லோக்சபா தொகுதிகளையும் 1996-ம் ஆண்டு முதல் தக்க வைத்த இடதுசாரிகளின் நிலை பரிதாபத்துக்குரியது. கிழக்கு திரிபுராவில் 19.22%; மேற்கு திரிபுராவில் 15.51% சதவீத வாக்குகளைத்தான் இடதுசாரிகள் பெற்றுள்ளனர். இடதுசாரிகளின் வாக்குகள்தானே பாஜகவை வெல்ல வைத்திருக்கின்றன. ஆம் 2 லோக்சபா தொகுதிகளில் பாஜக பெற்ற வாக்குகளைப் பாருங்கள்.
பாஜகவுக்கு அதிக வாக்குகள்
கிழக்கு திரிபுராவில் பாஜகவுக்கு 46.12%; மேற்கு திரிபுராவில் 51.77% வாக்குகளை பாஜக அறுவடை செய்திருக்கிறது. இடதுசாரிகளின் வாக்குகள் அப்படியே காவி கொடிக்குப் போனதால் செங்கொடி அதலபாதாளத்துக்குப் போயிருக்கிறது. மரண புதைகுழிக்குப் போன காங்கிரஸின் கை சின்னம் மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது.
இடதுசாரிகளின் தற்கொலை முயற்சி
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸை எதிர்க்கவும் திரிபுராவில் காங்கிரஸை எதிர்க்கவும் பாஜகவினராக உருமாறினர் இடதுசாரிகள். அதாவது தங்களைத் தாங்களே தற்கொலை செய்து கொண்டு தத்துவார்த்த எதிரிகளை அரியாசனத்தில் ஏற்றியிருக்கிறது இடதுகளின் ‘சித்தாந்த' அறிவு.